ஸ்பெயினின் மட்ரிட் நகரிலுள்ள கொரில்லா ஒன்று 46 வயது விலங்கியல் தோட்ட பராமரிப்பாளரைத் தாக்கி அவரைக் கடுமையாகக் காயப்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் இரண்டு கரங்களும் விலா எலும்புகளும் உடைந்திருப்பதாகவும் விலங்குத் தோட்ட மருத்துவ மற்றும் அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
தமது அன்றாடப் பணிகளைச் செய்துகொண்டிருந்த அந்தப் பணியாளரை மலாபோ என்ற அந்த 29 வயது ஆண் கொரில்லா திடீரெனத் தாக்கியது. சம்பவத்தின்போது அந்த கொரில்லா தமது அடைப்பிடத்தைவிட்டு எப்படி வெளிவந்தது என எவருக்கும் தெரியவில்லை. அந்த விலங்கு மயக்கமருந்து தோட்டாவால் கட்டுப்படுத்தப்பட்டதாக சம்பந்தப்பட்ட விலங்கியல் தோட்டம் தெரிவித்தது. விலங்கியல் தோட்டத்திலேயே பிறந்து வளர்ந்த மலாபோ ஏன் அந்தப் பணியாளரைத் தாக்கியது என்பது தெரியவில்லை.