கொரோனா கிருமித்தொற்று இருக்கிறதா என்பதை விரைந்து சோதிக்க உதவும் பரிசோதனைக் கருவிகள் அதிகபட்சம் 5 அமெரிக்க டாலர் (S$6.87) விலையில் கிடைக்கும்படி செய்யப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள 133 நாடுகளில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தி, பணக்கார நாடுகளுடனான இடைவெளியைக் குறைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அது நேற்று முன்தினம் தெரிவித்தது.
120 மில்லியன் கொவிட்-19 பரிசோதனை சாதனங்களை அடுத்த 6 மாதங்களுக்குள் தயாரிக்க, ‘அப்பாட்’, ‘எஸ்டி பயோசென்சார்’ நிறுவனங்கள் ‘பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ்’ அறநிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிருக்கின்றன. அவை எளிதில் பயன்படுத்தப்படக்கூடியவை என்றும் எளிதில் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்ல ஏதுவானவை என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியோசுஸ் குறிப்பிட்டார்.
தற்போது அந்தச் சாதனங்களின் விலை $5 என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் மலிவாகக் கிடைக்க வாய்ப்புண்டு என்றும் அவர் கூறினார்.
போதிய மருத்துவ வசதிகள் இல்லாத, போதிய பயிற்சி பெற்ற சுகாதாரத்துறை ஊழியர்கள் இல்லாத இடங்களில் கொவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ளவும் பரவலைக் கட்டுப்படுத்தவும் இவை உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
முதல் கட்டமாக, எயிட்ஸ், காசநோய், மலேரியா போன்றவற்றுக்கு எதிராகப் போரிட உதவும் அனைத்துலக நிதியம் இந்த பரிசோதனை சாதனங்களை வாங்குவதற்காக $50 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை இந்த வாரம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.