இந்தோனீசியாவில் பல மருத்துவர்கள் மரணம்; விசாரணை

இந்தோனீசியாவில் பல மருத்துவர்கள் மரணம்; விசாரணை

1 mins read
3cc2be4e-5420-4caa-856c-0d8d1eef571b
படச்ம்: THE JAKARTA POST/ASIA NEWS NETWORK -

இந்தோனீசியாவில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் முன்னணியில் பணியாற்றும் சுகாதாரப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் மிகவும் கவலை அடைந்துள்ள னர்.

இந்த நிலையில் மருத்துவர்கள் உயிரிழப்பு சம்பவங்கள் குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு இந்தக் குழுவை அமைத்துள்ளதாக சங்கத் தின் தலைவர் டாயேங் எம். ஃபக்கி தெரிவித்ததாக கொம்பாஸ்.காம் இணையத்தளம் குறிப்பிட்டது.

சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களை பாதுகாக்கும் வழிகளை குழு கண்டறியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தேசிய கொவிட்-19 தடுப்புப் பணிக்குழு, சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் சேர்ந்து தனிநபர் பாதுகாப்பு சாதனங்களையும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு இலவச கொவிட்-19 பரிசோதனை களையும் வழங்கி வருவதாகக் கூறிய அவர், மருத்துவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களில் மூலக் காரணங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றார்.

சென்ற செவ்வாய்க்கிழமை வரையில் கிருமித்தொற்றுக்கு 127 மருத்துவர்கள் பலியாகிவிட்டனர்.

அவர்களில் 65 பேர் பொது சுகாதார மருத்துவர்கள். மற்றவர்கள் சிறப்பு மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் என்று மருத்துவர் சங்கத்தின் பேச்சாளரான ஹலிக் மாலிக் தெரிவித்தார்.

இதற்கிடையே கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப் பவர்களை அடக்கம் செய்ய போதுமான இடங்கள் இல்லாததால் இரண்டு ஹெக்டர் நிலப்பரப்பை ஜகார்த்தா நிர்வாகத்தினர் தயார்ப் படுத்தி வருகின்றனர்.

ஜகார்த்தாவுக்கு வடக்கே அமையும் இடுகாட்டுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.