அமெரிக்காவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடும் இப்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப், தம்மை எதிர்த்துக் களமிறங்கும் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனும் நேற்று முதன்முறையாக நேரடி விவாதத்தில் பங்கேற்றார். அப்போது இருமுறை இந்தியாவைப் பற்றி குறிப்பிட்டார் டிரம்ப். ஆயினும் அவ்விருமுறையும் அவரது கருத்துகள் இந்தியாவிற்கு எதிரானதாகவே இருந்தன.
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பது பற்றி பைடன் கவலை தெரிவித்தபோது, சம்பந்தமே இல்லாமல் இந்தியா, சீனா, ரஷ்யாவை அதிபர் டிரம்ப் வம்புக்கு இழுத்தார்.
“சீனா, இந்தியா, ரஷ்யாவில் எத்தனை பேர் கொரோனாவால் இறந்தார்கள் என நமக்குத் தெரியாது. ஏனெனில், அம்மூன்று நாடுகளும் துல்லியமான எண்ணிக்கையை வெளியிடுவது இல்லை,” என்றார் டிரம்ப்.
கொரோனா தொற்றால் இதுவரை ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் இறந்துவிட்டனர். இந்நிலையில், பைடன் அதிபராக இருந்திருந்தால் இதுவரை இரண்டு மில்லியன் பேர் இறந்திருப்பர் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், பருவநிலை மாற்றம் பற்றிய பேச்சு வந்தபோது, “சீனா அதிக மாசுகளைக் காற்றில் கலக்க விடுகிறது. ரஷ்யாவும் இந்தியாவும் அவ்வாறே செய்கின்றன,” என்றும் அவர் சொன்னார்.