அமெரிக்காவில் மாது ஒருவருக்கு மூக்கின் வழியாக எச்சில் / சளி மாதிரி எடுக்கப்பட்டபோது, அவரது கபாலத்தின் அடிப்பகுதியில் உள்ள மெல்லிய படலம் பாதிக்கப்பட்டது.
அதனால் அந்தப் பெண்ணின் மூளைத் திரவம் மூக்கு வழியாக வழிந்ததாகக் கூறப்பட்டது. மூளையில் அந்தப் பெண்ணுக்கு தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவ சஞ்சிகை ஒன்றில் மருத்துவர்கள் நேற்று (அக்டோபர் 1) குறிப்பிட்டனர்.
நாற்பதுகளில் இருக்கும் அந்த நோயாளிக்கு கண்டுபிடிக்கப்படாத அரிய உடல்நிலை பாதிப்பு இருந்ததாகவும் அவருக்கு கொவிட்-19 பரிசோதனை சரியாகச் செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
பொதுவாக மூக்கிலிருந்து சளி மாதிரி எடுக்கும் பரிசோதனையால் (Swab test) ஏற்படும் அபாயம் குறைவு.
இருப்பினும் அசம்பாவிதங்களைத் தடுக்க, மருத்துவர்கள் மூக்கிலிருந்து சளி எடுக்கும் முறையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று ஜேரட் வால்ஸ் எனும் மருத்துவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சைனஸ் பிரச்சினை இருப்பவர்களும் கபாலத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களும் வாயிலிருந்து பரிசோதனை மாதிரிகள் எடுக்குமாறு கோரலாம் என்றார் அவர்.
ஹெர்னியா அறுவை சிகிச்சைக்கு முன்னதாக அந்தப் பெண்ணுக்கு கொவிட்-19 பரிசோதனை மாதிரி எடுக்கப்பட்டதாக அயோவா பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரியும் திரு வால்ஷ் கூறினார்.
பின்னர் அந்த மாதுவின் ஒரு மூக்கிலிருந்து நிறமற்ற திரவம் வடிந்தது. அதனைத் தொடர்ந்து தலைவலி, வாந்தி, கழுத்து பிடிப்பு, வெளிச்சம் ஒவ்வாத நிலை போன்ற சிரமங்களை அவர் எதிர்கொண்டதால் திரு வால்ஷ் அவருக்கு சிகிச்சை அளித்தார்.
அந்த மாதுவுக்கு இதற்கு முன்பு அதே மூக்கிலிருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டதாகவும் அப்போது அவருக்கு இது போன்ற பிரச்சினை ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு மூளைத் திரவ அழுத்தம் அதிகமாக இருந்ததாகவும் அதன்பொருட்டு, அவரது மூளையின் அடிப்பகுதி ஒரு மூக்கில் துருத்திக்கொண்டிருந்ததும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அந்தப் பெண் முற்றிலும் குணமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்ற சம்பவம் அரிதானது என்றாலும் இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ள தரம் மிக்க பயிற்சி அளிப்பது அவசியம் என்றும் திரு வால்ஷ் குறிப்பிட்டார்.