மியன்மாரில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ளவர்களை மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் வளாகங்களுக்கும் அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபடும் தொண்டூழியர்களின் பாடு பெரும் சிரமமானதாகியுள்ளது.
மிகவும் மோசமான மருத்துவ வசதிகளைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான மியன்மாரில், இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொண்டூழியர்களின் பணி மிகவும் முக்கியமானது.
ஒரு மாதத்துக்கு முன்பு கொரோனா தொற்றால் அங்கு 7 மரணங்கள் மட்டுமே பதிவாகியிருந்தன. ஆனால் இப்போது அங்கு 16,500க்கும் அதிகமானோருக்கு தொற்று பதிவாகியுள்ளதுடன் 371 பேர் உயிரிழந்துவிட்டனர்.
ராய்ட்டர்சின் தரவுகளின் படி, மியன்மாரின் கிருமித்தொற்று 7.8 நாட்களுக்குள் இரட்டிப்பாகியுள்ளது. கிருமித்தொற்றால் ஐந்து மரணங்களுக்கு மேல் பதிவாகியுள்ள நாடுகளிடையே, மியன்மாரின் இந்த கிருமித்தொற்று விகிதம் மிகவும் விரைவானது என்று கூறப்படுகிறது.
பள்ளிகள், பௌத்த மடாலயங்கள், அரசாங்க அலுவலகங்கள் போன்றவை தனிமைப்படுத்தும் வளாகங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய சூழலில் 45,000க்கும் அதிகமானோர் அந்த வளாகங்களில் தங்கியுள்ளனர்.
கொவிட்-19 சூழல் மோசமடைந்து வரும் நிலையில், தொண்டூழியர்களுக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படாவிட்டாலும், இவ்வாறு உதவி செய்வதை நிறுத்தப்போவதில்லை என்கின்றனர் அவர்களில் பெரும்பாலானோர்.
எப்போதாவது உணவு வழங்கப்படும்; பாதுகாப்பு உடைகளும் அனைவருக்கும் அனைத்து சூழல்களில் வழங்கப்படுவதில்லை. இருப்பதை வைத்து சமாளித்து வருகின்றனர். நாளுக்கு ஒரு சில மணி நேரம் மட்டுமே தூங்குவதாகக் குறிப்பிடும் அவர், “எனக்கும் கிருமித்தொற்று ஏற்படுமோ என்று முன்பு பயந்தேன்; ஆனால் அந்த பயம் இப்போது இல்லை,” என்கிறார் 29 வயதான ஸார் நி எனும் தொண்டூழியர்.
“தொண்டூழியர்கள் இல்லாவிட்டால், நான் இந்நேரம் பிழைத்திருக்கமாட்டேன்,” என்று கொவிட்-19 நோயாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.