கொரோனா தொற்றை கடுமையானதாகக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் திரு டிரம்ப், தனது தொற்றைத் தவிர்த்திருந்திருக்கலாம் என்று அமெரிக்கர்கள் கருதுவதாக ராய்ட்டர்ஸ் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
திரு டிரம்பின் தீவிர ஆதரவாளர்கள் மட்டுமின்றி அதிகமானோர் அவருக்கு ஆதரவளிப்பது கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.
அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்திற்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் திரண்டனர்.
அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு 200,000க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், கொரோனா தொற்று தானாக மறைந்துவிடும் என்றும், முகக்கவசம் அணிவது தேவையில்லை என்றும் திரு டிரம்ப் கூறி வந்தார்.
முகக்கவசம் அணிந்த திரு ஜோ பைடனைக்கூட அவர் அதன் தொடர்பில் சாடியிருந்தார்.
அடுத்த மாதம் 3ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 51 விழுக்காட்டினர் திரு பைடனை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர்.
ஆய்வில் பங்கேற்ற 41 விழுக்காட்டினர் திரு டிரம்புக்கு வாக்களிக்க இருப்பதாகவும் 4 விழுக்காட்டினர் மூன்றாவது கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பதாகவும் குறிப்பிட்ட வேளையில், எஞ்சிய 4 விழுக்காட்டினர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றனர்.