கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார். இதன் மூலம் அவர் விரைவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் மீண்டும் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு அமெரிக்க அதிபருக்கான ‘மரின் ஒன்’ ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகையை அவர் சென்றடைந்தார்.
முன்னதாக, தமது உடல்நிலை குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்த திரு டிரம்ப், “நான் உண்மையிலேயே நலமாக உள்ளேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட மேலும் புத்துணர்ச்சியுடன் உள்ளேன். கொரோனாவுக்கு அஞ்சாதீர்கள். அதை உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தவிடாதீர்கள்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
தலைநகர் வாஷிங்டனுக்குப் புறநகரில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் சிகிச்சை முடிந்து வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய அவர், வெள்ளை மாளிகையின் மேல்மாடத்தில் நின்று தமது முகக்கவசத்தை கழற்றிவிட்டு புகைப்படங்களுக்கு காட்சியளித்தார். அதோடு கட்டைவிரலை உயர்த்திகாட்டிய பின்னர், ராணுவப் பாணியில் அவர் சல்யூட் அடித்தார்.