கனடாவின் வான்கூவரில் உள்ள பணக்காரர்கள் வசிக்கும் பகுதி ஒன்றில் சீனாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் அவரது 6 மில்லியன் அமெரிக்க டாலர் (S$8.16 மில்லியன்) மதிப்புள்ள வீட்டுக்கு முன்பாக உறவினர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர், அவரது உடலை, கொலையாளி 108 துண்டுகளாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் 2015ஆம் ஆண்டில் நிகழ்ந்தது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி டெரென்ஸ் சல்ட்ஸ் நேற்று கொலையாளிக்கு 10 ஆண்டுகள், 6 மாத சிறை தண்டனை விதித்தார்.
யுவான் கான் எனும் ஆடவரைக் கொன்ற ஸாவோ லி எனும் அந்த ஆடவர், யுவானின் தொழில்முறைப் பங்காளியும் உறவினருமாவார்.
மற்றொரு பகுதியில் 13 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 10 அறை வீடு, ஒரு பென்ட்லி கார், ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார், ஒரு தனியார் தீவு, ஒரு படகு போன்றவற்றுக்கு சொந்தக்காரராக இருந்த யுவான், ஸாவோவின் மகளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறினார்.
திரு ஸாவோவின் மகள் புளோரன்ஸ் ஸாவோ ஒரு பிரபல உடை வடிவமைப்பாளர், சமூக ஊடகப் பிரபலம்.
திரு யுவான் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தவர் என்ற காரணத்தால் அவருக்கு பெண் தர விரும்பாமல் அவரை ஸாவோ, துப்பாக்கியால் இருமுறை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
யுவானின் மரணத்துக்குப் பிறகு சீனாவைச் சேர்ந்த 7 பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு யுவான் தான் தந்தை என்று கூறி அவரது சொத்துகளில் உரிமை கோரினர்.
திரு யுவானின் சொத்துகளை ஏழு பெண்களும் பகிர்ந்துகொள்ள கனடாவைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.