பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் கிள்ளான் பள்ளத்தாக்கில் மூன்றாவது நாளாக தண்ணீர் விநியோகத் தடையால் ஆவேசம் அடைந்துள்ள குடியிருப்பாளர்கள், இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமலிருக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பலரும் சமூக ஊடகங்களில் விரக்தியை வெளிப்படுத்தினர். தண்ணீர் மாசுபாட்டிற்கு காரணமானோருக்கு சட்டப்படி கடுமையான தண்டனை விதிக்குமாறு அதிகாரிகளிடம் மக்கள் கோரி வருகின்றனர்.
ஆறுகளில் ஏற்பட்டுள்ள தண்ணீர் மாசுபாடு காரணமாக இரு தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் பெட்டாலிங், ஹுலு லங்காட், கோலா, லங்காட், செப்பாங் மாவட்டங்களில் 309,687 பயனாளர்களுக்கு தண்ணீர் விநியோகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தடைப்பட்டது.