கோலாலம்பூர்: மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா (படம்) நேற்று முதல் தம்மை தனிமைப்படுத்திக்கொண்டார். கொவிட்-19 தொற்றியவருடன் அவர் தொடர்பில் இருந்ததைத் தொடர்ந்து தம்மை தனிமைப்படுத்திக் கொண்டார்.அன்றாட கொவிட்-19 தொடர்பான செய்தியாளர் சந்திப்புகளை அவர் வீட்டிலிருந்தவாறு நடத்துகிறார். கடந்த சனிக்கிழமை புத்ராஜெயாவில் மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமை தாங்கிய தேசிய பாதுகாப்பு மன்ற சிறப்புக் கூட்டத்தில் டாக்டர் நூர் ஹிஷாம் பங்கேற்று இருந்தார்.
சமய விவகார அமைச்சர் ஸுல்கிஃப்லி முகம்மது அல் பக்ரி உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள் பலரும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். டாக்டர் ஸுல்கிஃப்லிக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் 14 நாட்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் நேற்று முன்தினம் கூறினார்.
தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளவர்களில் பிரதமர் முகைதீனும் அடங்குவார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு கோரினார் அமைச்சர்
இதற்கிடையே, தம்மை கிருமி தொற்றியதற்கு தமது நடைமுறையில் குறைபாடு எதுவும் காரணமாக இருந்திருந்தால் அதற்காக டாக்டர் ஸுல்கிஃப்லி மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
"எனது செயல்பாடுகளைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதற்கும் என்னை மேம்படுத்திக்கொள்வதற்கும் இந்தத் தருணம் வாய்ப்பளிக்கிறது," என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் நேற்று பதிவிட்டார்.
கடந்த மாதம் 24ஆம் தேதிக்கும் இம்மாதம் 4ஆம் தேதிக்கும் இடையில் தாம் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்கள் உடனடியாக கிருமித்தொற்றுப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு டாக்டர் ஸுல்கிஃப்லி அறிவுறுத்தினார். மலேசியாவில் கிருமித்தொற்று அதிகரித்து வரும் வேளையில் டாக்டர் ஸுல்கிஃப்லிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

