ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கொவிட்-19 மருந்தான ரெம்டெசிவிருக்குப் பற்றாக்குறையை எதிர்நோக்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவிலும் கிருமித்தொற்று அதிகரித்துள்ள நிலையில் மருந்தக தயாரிப்பாளரான கிலெட்டி நிறுவனத்தின் உற்பத்திகளில் பெரும்பாலானவற்றை அமெரிக்கா தனக்கென வாங்கியுள்ளது.
ரெம்டெசிவிரை மேலும் பரவலாக விநியோகம் செய்ய அந்நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட அமைப்புகளுடன் செயலாற்றும் என அதன் தலைமை வர்த்தக அதிகாரி ஜொயெனா மெர்சியர் தெரிவித்தார். அம்மருந்துக்கான ஐரோப்பிய முன்பதிவுகள் அடுத்த வாரத்திற்குள் நிறைவேற்றும் என்றும் உலகத் தேவைகளை நிறைவேற்ற இம்மாத இறுதிக்குள் தயாராகிவிடும் என்றும் அவர் கூறினார்.
கடுமையான கொரோனா கிருமித்தொற்று அறிகுறிகள் உள்ளோர் மருத்துவமனையில் தங்க வேண்டிய காலத்தை இந்த மருந்து குறைக்கும்.
ஜூலை மாதத்தின்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளும் பிரிட்டனும் கிட்டத்தட்ட 30,000 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் போதுமான ரெம்டெசிவிர் மருந்தைத் தருவிப்பதற்கான ஒப்பந்தங்களை உறுதி செய்துள்ளனர். அந்நாடுகளின் மொத்த மக்கள் தொகை, 500 மில்லியன். ஐரோப்பா முழுவதிலும் கொவிட்-19 பாதிப்பால் நாளுக்கு நாள் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.