கொழும்பு: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தில் உள்ள எவருமே அப்பாவிகள் கிடையாது என இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதியும் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறுவர் படை அணியின் முதன்மைக் கட்டளை அதிகாரியாகச் செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் பிரபாகரனின் மனைவி புலிகளின் விநியோகப் பிரிவின் பொறுப்பாளராகவும் மூத்த மகன் அந்த அமைப்பின் கர்னலாகவும் மகள் பெண்கள் பிரிவில் மேஜராகவும் செயல்பட்டதாக பொன்சேகா குறிப்பிட்டார்.
இறுதிக்கட்டப் போர் முடிவடைந்த பிறகு பிரபாகரன் மற்றும் மூத்த மகனின் சடலங்கள் மட்டுமே ராணுவத்துக்குக் கிடைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய எஸ்.கஜேந்திரன் எம்பி, பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுக்கு உணவு, தண்ணீர் வழங்கி அவரை இலங்கை ராணுவமே சுட்டுக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.