கொவிட்-19 தொற்றிய ஒரு வாரத்துக்குள் அலுவலகத்தில் பணிக்குத் திரும்பினார் டிரம்ப்

1 mins read
efc4f58a-885f-4f06-afa1-b3b0c038e473
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ் -

கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு ஒரே வாரத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையின் 'ஓவல்' அலுவலகத்தில் பணிக்குத் திரும்பிவிட்டார்.

பணிக்குத் திரும்பிய அவர் அங்கு சந்திப்பு ஒன்றையும் நடத்தினார்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் திரு டிரம்ப்புக்கு இல்லை என்றும் கடந்த நான்கு நாட்களாக காய்ச்சல் எதுவும் இல்லை எனவும் அவரது மருத்துவர் ஷான் கான்லே தெரிவித்துள்ளார்.

தாம் சிறப்பாக உணர்வதாகவும் தம்மை கிருமி தொற்றியது "கடவுள் தமக்கு அளித்த ஆசீர்வாதம்" எனவும் திரு டிரம்ப் கூறினார்.

மேலும் மருந்து உற்பத்தி நிறுவனமான 'ரிஜெனரான்' தயாரிக்கும் மருந்து அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

திரு டிரம்ப்புக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது இந்த நிறுவனம் தயாரித்த மருந்து அவருக்கு கொடுக்கப்பட்டது.

"நான் இந்த மருந்து குறித்து கேள்விப்பட்டிருந்தேன். இது சிறப்பானதாக உள்ளது," என தெரிவித்த அவர், அமெரிக்காவில் இந்த மருந்து பயன்பாட்டிற்கு வர அவசர ஒப்புதலைப் பெறவுள்ளதாக தெரிவித்தார்.

"நீங்கள் இந்த மருந்துக்காக விலைகொடுக்க வேண்டாம். இம்மாதிரியான சூழலுக்கு நீங்கள் பொறுப்பில்லை. இது சீனாவின் தவறு. எனவே சீனாதான் இதற்காக பெரும் விலை கொடுக்க வேண்டும்," என அமெரிக்கர்களிடம் திரு டிரம்ப் கூறினார்.

இம்மாதம் 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலேனியா டிரம்ப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்