தாய்லாந்து தலைநகர் பேங்காக் அருகே சுற்றுப் பயணிகள் பேருந்து ஒன்றுடன் சரக்கு ரயில் மோதியதில் கிட்டத்தட்ட 20 பேர் உயிரிழந்ததாகவும் 30 பேர் காயமுற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேங்காக்கில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெலோங் குவாயெங் கிளான் ரயில் நிலையத்தில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் காலை 9 மணி) விபத்து நிகழ்ந்தது.
அப்போது பேருந்தில் சுமார் 60 தொழிற்சாலை ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் சாச்சோயெங்சா மாநிலத்தில் உள்ள பௌத்த ஆலயம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய விழாவுக்குச் சென்றுகொண்டு இருந்ததாக மாவட்ட போலிஸ் தலைமை அதிகாரி கூறினார். தண்டவாளத்தை பேருந்து கடந்த போது அதன் மீது ரயில் பலமாக மோதியதென மாநில பேரிடர் நிர்வாக முகவை கூறியது.
அந்த ரயில் நிலையத்தின் தண்டவாளத்தைக் கடக்கும் வழியில் தடுப்புக் கதவுகள் இல்லை என்றும் அது கூறியது.