வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் மூலம் இனியும் மற்றவர்களுக்கு கிருமித்தொற்று ஏற்படும் ஆபத்து இல்லை என்று வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ மருத்துவர் கூறியுள்ளார்.
சென்ற வியாழக்கிழமைக்குப் பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம் அதிபர் டிரம்ப்பின் உடல்நிலை பற்றிய குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், அதிபரிடம் மேற்கொள்ளப்பட்ட அண்மைய சோதனைகளில் அவருக்கு கிருமி இருப்பதற்கான அறிகுறி இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக மருத்துவர் ஷோன் கான்லே தெரிவித்திருந்தார். ஆனால் அவர் முழுமையாக குணமடைந்துவிட்டாரா என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திரு டிரம்ப்புக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்று நாள் சிகிச்சைக்குப் பிறகு சனிக்கிழமை அன்று வெள்ளை மாளிகைக்கு வருகையளித்த அவர் பலத்த கைதட்டலுக்கு இடையே தனது ஆதரவாளர்களிடம் பேசினார்.
அதிபர் டிரம்ப் மூலம் மற்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவும் வேளையில் மருத்துவரின் அறிவிப்பு வெளியாகி யுள்ளது. அதிபரின் உடலில் எந்த அளவுக்கு கிருமித் தொற்றுப் பாதிப்பு இருக்கிறது என்பதை அறிய நுட்பமான சோதனை நடத்தப்பட்டது என்று கூறிய திரு ஷோன் கான்லே, அவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்றார்.
பத்து நாட்களுக்கு முன்பு டிரம்ப்பிடம் கொவிட்-19 பாதிப்பு தென் பட்டதால் மறுநாள் அக்டோபர் 2ஆம் தேதி அவர் வால்டர் ரிட் மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
கிருமியால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமானவர்களுக்கு வழங்கப்படும் ‘டெக்ஸோமித்தசோன்’ உட்பட பல்வேறு மருந்துகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.