கொவிட்-19 தொற்றைப் பரப்பும் கிருமி, பணத்தாள், கண்ணாடி, எஃகு போன்ற மேற்பரப்புகளில் இருக்கும்போது நான்கு வார காலத்திற்கு நோயைப் பரப்பும் திறனைக் கொண்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் அமைப்பின் இந்த ஆய்வு முடிவுகள், கொரோனா கிருமி இதுவரை எண்ணியிருந்ததைக் காட்டிலும் அதிக காலத்திற்குத் தாக்குப்பிடிக்கும் எனக் கூறுகின்றன.
இருப்பினும், இந்த ஆய்வு இருளில் மேற்கொள்ளப்பட்டது. புற ஊதாக் கதிர்கள் படும்போது கொரோனா கிருமி அழிந்துவிடும் எனச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அன்றாட வாழ்க்கையில் மேற்பரப்புகள் வழியாக கொரோனா பரவும் அச்சுறுத்தல் இருக்கிறதா என நிபுணர்கள் சிலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
பெரும்பாலும் இருமுவதன், தும்முவதன் அல்லது பேசுவதன் மூலம் கொரோனா பரவுகிறது.
ஆனாலும், காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் மூலம் கிருமித் தொற்று பரவலாம் என்பதற்கும் சான்றுள்ளது. கிருமி ஒட்டியிருக்கக்கூடிய உலோகம் அல்லது பிளாஸ்டிக் போன்ற மேற்பரப்பைத் தொடுவதனாலும் அது பரவ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பணத்தாள்களிலும் கண்ணாடியிலும் ஒட்டியிருக்கும் கொரோனா கிருமி இரண்டு, மூன்று நாள்களுக்கு மட்டுமே நோயைப் பரப்பும் திறனைக் கொண்டிருக்கும் என்றும் பிளாஸ்டிக், எஃகு பரப்புகளில் ஆறு நாள்கள் வரை இருக்கும் என்றும் முந்தைய ஆய்வகச் சோதனைகளில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் அறிவியல், தொழில் ஆய்வு நிறுவனம், சாதாரண வெப்பநிலையில் அல்லது இருளில், கைபேசித் திரை போன்ற வழவழப்பான கண்ணாடிப் பரப்புகளிலும் பிளாஸ்டிக், காகிதப் பணத்தாள்களிலும் ஒட்டியுள்ள கொரோனா கிருமி வலுவான நோயைப் பரப்பும் திறனுடன் இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறது.