வாஷிங்டன்: அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றால் இதுவரை கிட்டத்தட்ட 215,000 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், 2021 ஜனவரி 1ஆம் தேதி அந்த எண்ணிக்கை 371,000ஆக அதிகரிக்கலாம் என்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார நிலையம் கணித்துள்ளது.
அதே வேளையில், சிங்கப்பூரிலும் வேறு சில நாடுகளிலும் இருப்பதைப் போல, முகக்கவசப் பயன்பாட்டைக் கிட்டத்தட்ட 95 விழுக்காடாக உயர்த்தினால் இவ்வாண்டு இறுதிக்குள் 96,000 உயிரிழப்புகளைத் தடுக்க முடியலாம் என்று சுகாதார அளவீட்டு, மதிப்பீட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
முகக்கவசப் பயன்பாடு தொடர்பில் சிங்கப்பூரைப் பற்றி அந்த நிலையம் குறிப்பிட்டிருப்பது இது முதன்முறை அல்ல.
சென்ற மாதத் தொடக்கத்தில், அமெரிக்கர்கள் பலர் முகக்கவசம் இன்றி வெளியே செல்லத் தொடங்கியதும், “சிங்கப்பூரைப் போல முகக்கவசப் பயன்பாட்டை அதிகரித்தால் மொத்த உயிரிழப்பை 288,000ஆகக் குறைக்க, அதாவது மேலும் 122,000 உயிர்களைக் காப்பாற்றலாம்,” என்று அந்நிலையம் கூறி இருந்தது.
இதனிடையே, நியூயார்க் நகரில் கடந்த வார இறுதியில் முகக் கவசம் அணியாமல் பாதுகாப்பு இடைவெளி விதிகளைக் கடைப்பிடிக்காததால் மொத்தம் 150,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.