பெட்டாலிங் ஜெயா: மலேசிய அரசாங்கம், கிருமித்தொற்று கட்டுக்கடங்காமல் பரவும் இடங்களில் நடமாட்டக் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கியிருக்கிறது.
அண்மைய வாரங்களாக கூட்டரசுப் பிரதேசங்களான கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகியவற்றுடன் சிலாங்கூர் மாநிலத்திலும் அச்சமூட்டும் வகையில் கிருமித்தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அரசாங்கம் பிறப்பித்துள்ளது.
இன்று அமலுக்கு வந்துள்ள இந்த உத்தரவு இம்மாதம் 27ஆம் தேதி வரை நீடிக்கவிருக்கிறது. புதிய நடமாட்டக் கட்டுப்பாடுகளால் நாடு முழுவதும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
“நகரங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் பாதிப்புக்கு உள்ளாவார்கள். குறிப்பாக ஏழை மக்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்,” என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்தார்.
இந்த நிலையில் வசதி குறைந்தவர்களுக்கும் உதவி தேவைப்படுவோருக்கும் கூடுதலான சமூகநல உதவிகளை அறிவிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதம் சிறிய நிறுவனங்கள், முன்களப் பணியாளர்கள், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு உதவ 63.6 மில்லியன் ரிங்கிட் (S$20.8 மி.) மதிப்புள்ள உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் தற்போது அமலாக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் ஏழை மக்களைப் பெரிதும் பாதிக்கும் என்பதால் கூடுதலான சமூக உதவிகள் வழங்குவது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது.
புதிய கட்டுப்பாட்டு உத்தரவு அமலாக்கப்படுவதை நேரில் சென்று தாம் மேற்பார்வையிடப் போவதாக திரு அனுவார் டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். பல அரசாங்க அமைப்புகளை உள்ளடக்கிய மத்திய அரசின் பேரிடர் நிர்வாக அமைப்பு தனது தலைமையில் செயல்படும் என்றும் அவர் சொன்னார்.
“கொவிட்-19 பரவலை முறியடிப்போம், வீட்டில் தங்கியிருங்கள், பாதுகாப்பாக இருங்கள், ஒற்றுமையாக இருங்கள்,” என்று திரு அனுவார் கேட்டுக்கொண்டார்.
கோலாலம்பூர், சிலாங்கூர் உட்பட குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாடுகள் அமலாக்கப்பட்டாலும் நாடு முழுவதும் அதன் பாதிப்பு எதிரொலித்துள்ளது. மலேசியா முழுவதும் ஹோட்டல் அறைகளுக்கான பதிவுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பேசிய மலேசிய ஹோட்டல்கள் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யாப் யிப் செங், புதிய கட்டுப்பாடுகளால் ஹோட்டல் அறைகளுக்கான பதிவுகளையும் தாண்டி பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.