அமெரிக்கா வில் வசிக்கும் இந்தியர்களில் முக்கால் வாசிப் பேர் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு வாக்களிக்கத் திட்டமிட்டு இருப்பதாக கருத்தாய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையில் அரசாங்கம் தவறான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறதென இந்தியர்கள் கூறியதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. அனைத்துலக அமைதிக்கான கார்னகி அறக்கட்டளை, ஜான்ஸ் ஹாப்கின்ஸ்-எஸ்ஏஐஎஸ், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 20 வரை அந்த ஆய்வை நடத்தின.
அமெரிக்காவின் இரண்டாவது பெரிய குடியேற்றக் குழுவாக இந்தியர்கள் உள்ளனர். இருப்பினும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்கான பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் இந்தியர்கள் விகிதம் 1 விழுக்காட்டுக்கும் கீழ்தான். அதேநேரம் தங்களுக்கு ஆதரவு திரட்ட அமெரிக்காவின் இரு கட்சிகளும் இந்தியர்களை நாடி உள்ளன.
துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண்ணான செனட்டர் கமலா ஹாரிஸை தேர்வு செய்த பின்னர் இந்தியர்கள் மத்தியில் ஜோ பைடனுக்கான ஆதரவு அதிகரித்துவிட்டதாக குறிப்பிடும் ஆய்வு இந்தியர்களில் 72 விழுக்காட்டினர் திரு ஜோ பைடனுக்கும் 22 விழுக்காட்டினர் திரு டிரம்ப்புக்கும் வாக்களிக்க இருப்பதாக தெரிவித்தது. அமெரிக்காவின் இந்திய சமூகம் ஜனநாயகக் கட்சிக்கு உறுதுணையாக இருப்பது வழக்கம் என்றபோதிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதிபர் டிரம்ப்புக்கும் இடையிலான ஆழமான நட்பின் காரணமாக குடியரசுக் கட்சி மீதான அச்சமூகத்தின் எதிர்பார்ப்புகள் வளர்ந்திருப்பதாகக் கருதப்படுகிறது.