நிலநடுக்கம் 2017ஆம் ஆண்டில் மெக்சிகோவை உலுக்கியபோது பள்ளி ஒன்று இடிந்து விழுந்து அதிலிருந்த 19 குழந்தைகளும் 7 பெரியவர்களும் நசுங்கி உயிரிழந்தனர். இதன் தொடர்பில் அப்பள்ளியின் உரிமையாளருக்கு மெக்சிகோ நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
வகுப்பறைகளின் மேல் தளத்தில் பெரிய வீடு ஒன்றை மோனிகா கார்சியா வில்லேகஸ் கட்டியிருந்தார் என்றும் நிலநடுக்கத்தின்போது வீட்டின் எடை தாங்க முடியாமல் கட்டடம் இடிந்து விழுந்தது என்றும் தெரிய வந்ததை அடுத்து கார்சியா வில்லேகஸ் கைது செய்யப்பட்டார்.
மரணம் விளைவிக்கும் குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டதை அடுத்து சென்ற மாதம் அது நிரூபணமானது.
சிறைத் தண்டனையுடன் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு கார்சியா மொத்தம் 11.5 மில்லியன் பெசோவும் (S$731,000) கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தண்டனை விதிப்புக்குப் பின் அரசாங்கத் தலைமை சட்ட அதிகாரி, உயிரிழந்தோரின் குடும்பங்களின் வழக்கறிஞர்கள் ஆகியோர் தங்கள் திருப்தியைத் தெரிவித்தனர்.
ஓராண்டுக்கு மேல் தலைமறைவாக இருந்த கார்சியா, தொடர்ந்து தான் குற்றமற்றவர் என்று கூறுவதுடன் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
7.1 ரிக்டர் அளவு நிலநடுக்கத்திற்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கியோரைக் காப்பாற்ற மீட்புப் பணியினர் விரைந்தனர். அப்போது இடிந்து விழுந்த இப்பள்ளிக் கட்டடம், உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
செலவுகளைக் குறைக்க முயலும் கட்டுமான நிறுவனங்கள், அதிகாரிகளின் ஊழல் அல்லது தகுதியின்மை ஆகிய இரண்டும் நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் இடிந்து விழக் காரணங்களாக இருந்திருக்கலாம் என்று ஆர்வலர்கள் கூறினர்.
இந்த நிலநடுக்கத்தில் 369 பேர் உயிரிழந்தனர்.