ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பேங்காக் தெருக்களில் இன்று (அக்டோபர் 15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னர் மகாவஜ்ஜிரலொங்கோன், பிரதமர் பிரயூத் சான் ஓ சா ஆகியோரைக் குறிவைத்து கடந்த 3 மாதங்களாக நடத்தப்படும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு திணிக்கப்படும் தடைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தில் தாய்லாந்து மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று விரல்களில் வணக்கம் செலுத்தி தங்களது எதிர்ப்பை ஆர்ப்பாட்டக்காரர்கள் பதிவு செய்தனர்.
திரு பிரயூத் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகளை சூழ்ச்சித் திறனுடன் கையாண்டதாகக் குறிப்பிட்டு அவரைப் பதவியிலிருந்து நீக்கும் பொருட்டு இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
ஆனால், தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றதாக முன்னாள் ஜுண்டா தலைவருமான திரு பிரயூத் குறிப்பிடுகிறார்.
மேலும், அரசருக்கான அதிகாரங்களைக் குறைத்து புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்று அவசர ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட அரை மணி நேரத்துக்குள், திரு பிரயூத்தின் அலுவலகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கலவரத் தடுப்பு போலிசார் கலைத்தனர். ஆணைகளை ஏற்க மறுத்த 20க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.