போலி இந்திய பாஸ்போர்ட்டுடன் அமெரிக்காவிலிருந்து வெளியேற முயன்ற தமிழர் கைது

போலி இந்திய பாஸ்போர்ட்டுடன் அமெரிக்காவிலிருந்து வெளியேற முயன்ற தமிழர் கைது

1 mins read
eeb6c564-4e33-4bd4-aa18-fce8a368e863
படம்: ஊடகம் -

அமெரிக்காவில் வசித்து வரும் தமிழரான 41 வயது துரைகந்தன் முருகன் போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சி செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தனர்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் சிகாகோ அனைத்துலக விமான நிலையத்துக்கு வந்த முருகனிடம் வழக்கமான விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டைக் கோரினர். எல்விஸ் டயாஸ் எனும் பெயரிலான இந்திய பாஸ்போர்ட்டை அவர் அதிகாரிகளிடம் வழங்கினார்.

அவரிடமிருந்த மற்ற ஆவணங்களில் துரைகந்தன் முருகன் எனும் பெயர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரது 'பயோமெட்ரிக்' தகவல்களை ஆராய்ந்தபோது அவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்த விசாரணையில், தம்முடைய தந்தை மிகுந்த உடல்நலப் பிரச்சினையில் இருப்பதாகவும் அவரைப் பார்ப்பதற்காக, தம் நண்பரின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி நாட்டை விட்டுச் செல்ல முயற்சி செய்ததாகவும் முருகன் குறிப்பிட்டார்.

மேற்கொண்டு விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரை நியூ ஜெர்சி போலிசிடம் ஒப்படைத்தனர்.