விமானப் பயணத்தின்போது கொரோனா கிருமித்தொற்று பரவும் அபாயம் மிகக் குறைவு என அமெரிக்காவின் தற்காப்புத் துறை நேற்று (அக்டோபர் 15) வெளியிட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
கொவிட்-19ஆல் பெரும் சரிவில் இருக்கும் விமானப் போக்குவரத்துத் துறை மீண்டுவர இந்தத் தகவல் ஊக்கமளிப்பதாக அமைகிறது.
விமானத்தில் இருக்கையில் அமர்ந்திருப்பவர் முகக்கவசம் அணிந்திருக்கும் நிலையில், சராசரியாக 0.003% காற்றுத் துகழ்கள் மட்டுமே அவரது தலையைச் சுற்றிய சுவாசப் பகுதிகளில் கிருமியைப் பரப்பக்கூடும். அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தாலும் இதுதான் நிலவரம்.
விமானத்தில் பயணம் செய்வோரில் ஒரே ஒருவருக்கு மட்டும் கிருமித் தொற்று இருப்பதாக ஆய்வு அனுமானம் கொண்டது. மேலும், அந்த நபர் விமானத்துக்குள் அங்குமிங்கும் சென்று வருவதும் ஆய்வில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
யுனைட்டெட் ஏர்லைன்ஸ் போயிங் 777, 767 விமானங்களில் மேற்கொண்ட ஆய்வில், அருகில் உள்ள இருக்கையில் இருப்பவர் இருமினால்கூட தொற்று பரவலை முகக்கவசம் அணிவது குறைத்தது தெரியவந்தது.
விமானத்தில் காற்று வேகமாக சுழல்வதால் சுமார் 99.99% துகள்கள் ஆறு நிமிடங்களுக்குள் விமானத்திலிருந்து வெளியேறியதும் தெரியவந்தது.
அந்தச் சூழலில், அனுமானங்களுடன், கிருமித்தொற்றுடன் பயணம் செய்பவர் மூலம் உடன் வரும் வேறு ஒருவருக்கு கிருமித்தொற்று ஏற்படத் தேவையான அளவுக்கு கிருமிப் பரவ வேண்டுமானால் 54 மணி நேர விமானப் பயணம் தேவைப்படும்.