பாரிஸ்: பிரான்சின் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகே வரலாற்று ஆசிரியர் ஒருவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டார். நபிகள் நாயகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியதால் ஆத்திரமடைந்த சந்தேக நபர் ஆசிரியரைக் கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தால் பாரிஸ் நகர மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், இதையொரு பயங்கரவாதச் செயலாக வருணித்தார்.
“அவர்கள் வெற்றி பெற முடியாது. நாங்களும் பதில் நடவடிக்கைகளை எடுப்போம். மாணவர்களுக்கு பேச்சுரிமை பற்றி கற்றுக் கொடுத்ததால் ஆசிரியர் கொல்லப்பட்டிருக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை அன்று ஒரு பள்ளிக்கு அருகே உள்ளூர் நேரப்படி மாலை ஐந்து மணியளவில் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார்.
“சந்தேக நபரை தேடிக் கண்டு பிடித்தோம். ஆனால் அவன் தப்பிக்க முயற்சி செய்ததால் துப்பாக்கியால் சுட்டோம். அதில் அவன் இறந்துவிட்டான்,” என்று பாரிஸ் நகர போலிசார் கூறினர்.
சந்தேக நபர், 18 வயது செச்சென்யாவை பூர்வீகமாகக் கொண்டவன் என்பது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஒன்பது பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.