உலகளவில் புதிதாக பதிவான கொவிட்-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் புதிய உச்சத்தை எட்டின. நேற்று முன்தினம் ஒரேநாளில் 400,000க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகின.
ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா கிருமித்தொற்று அலை எழுந்திருப்பதே அதற்குக் காரணம். முதல் கிருமித்தொற்று அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய ஐரோப்பா, அண்மைய வாரங்களாக கிருமி பரவும் மையப் பகுதியாக உருவெடுத்துள்ளது.
அங்கு கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 140,000க்கும் அதிகமான நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வந்தன.
அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் அன்றாடம் பதிவாகும் நோய்த்தொற்றுச் சம்பவங்களைக் கூட்டினாலும் ஐரோப்பாவில்தான் அதைவிட அதிகமான சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
உலகம் முழுவதும் பதிவாகும் நோய்த்தொற்றுச் சம்பவங்களில் மூன்றில் ஒரு பங்கு ஐரோப்பாவில்பதிவாவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் ஒவ்வொரு ஒன்பது நாட்களுக்கும் ஒரு மில்லியன் நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இதுவரை அங்கு மொத்தம் 6.3 மில்லியன் பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் புதிதாக பதிவாகும் தொற்றுச் சம்பவங்களில் ஏறத்தாழ பாதியளவு பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பதிவாகின.
கிருமிப் பரவல் மோசமடைவதைத் தடுக்க சில ஐரோப்பிய நாடுகளில் பள்ளிகள் மூடப்படுகின்றன. மாணவர்களுக்கு இணையம்வழி கற்றல் முறைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வட அயர்லாந்தில் பள்ளிகள் இரு வாரங்களுக்கும் உணவகங்கள் நான்கு வாரங்களுக்கும் மூடப்படுகின்றன.
ஸ்பெயினின் கேட்டலோனியா பகுதியில் 15 நாட்களுக்கு மதுபானக்கூடங்களையும் உணவகங்களையும் மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில் கடைகளுக்குள் அனுமதிக்கப்படுவர்கள் எண்ணிக்கையில் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ள வேளையில் பல்லாயிரக்கணக்கான மருத்துவ மாணவர்களைப் பணி அமர்த்த செக் குடியரசு திட்டமிடுகிறது. கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக இடம் ஒதுக்க, அவசரமில்லாத மருத்துவச் சிகிச்சை முறைகளை மருத்துவமனைகள் ஒத்திவைக்கின்றன.
போலந்தில் நோய்த்தொற்று நிலவரம் பேரிடர் நிலையை எட்டும் அபாயத்தில் இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அந்நாட்டில் நோய்த்தொற்று அதிகரித்து வரும் வேளையில், ராணுவத் தளங்களில் தற்காலிகமாக மருத்துவமனைகளைக் கட்டுவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
உலகிலேயே கொவிட்-19 நோய்த்தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதி லத்தீன் அமெரிக்கா.
உலகளவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கால்வாசிப் பேர் லத்தீன் அமெரிக்காவில்தான் உள்ளனர். அதற்கு அடுத்த நிலைகளில் ஆசியா, வடஅமெரிக்கா, ஐரோப்பா வருகின்றன.
பிரான்சில் ஊரடங்கு - பக்கம் 6