உலக அளவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 மில்லியனைத் தாண்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கணக்கெடுப்பு காட்டுகிறது.
நாடுகளின் அதிகாரபூர்வமாகப் பதிவுசெய்யும் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. ஆனால் உண்மையில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
கிருமித்தொற்று பாதிப்பு அதிகம் உள்ள சில நாடுகளில் பரிசோதனை விகிதம் குறைவாக இருப்பதும் பொருளியலைக் கருதி, தொற்று எண்ணிக்கையைச் சில நாடுகள் குறைத்து காட்டுவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
அதிகாரபூர்வத் தகவல்களின்படி, கிருமி வேகமாகப் பரவுகிறது. வெறும் 32 நாட்களில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் 30 மில்லியனில் இருந்து 40 மில்லியனுக்கு உயர்ந்துள்ளன.
ஒப்புநோக்க, கிருமித்தொற்றுச் சம்பவங்கள் 20 மில்லியனில் இருந்து 30 மில்லியனை எட்ட 38 நாட்கள் ஆகின.
தொற்றுச் சம்பவங்கள் 10 மில்லியனில் இருந்து 20 மில்லியனைத் தொட 44 நாட்கள் எடுத்தன. தொற்று 10 மில்லியனை எட்ட மூன்று மாதங்கள் ஆகின.
அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் உலகில் கிருமித்தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

