அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில், 55 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தேர்தல் விளம்பரத்தை அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதற்கான நிதியை குடியரசுக்கட்சியின் தேசியக் குழு வழங்குகிறது.
அரிசோனா, ஐயோவா, ஒஹாயோ, மிச்சிகன், நார்த் கரோலைனா, ஃபுளோரிடா, பென்ஸ்சில்வேனியா, ஜியோர்ஜியா, நிவேடா, விஸ்கொன்சின் ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கும் தேர்தல் பிரசாரங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
தமது தேர்தல் பிரசார அணியினருடன் நேற்று முன்தினம் காலை நடைபெற்ற காணொளி வாயிலான கூட்டத்தில் தம்மை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பைடனை அதிபர் டிரம்ப் சாடினார்.
ஜோ பைடனின் மகனான ஹன்டர் பைடனின் வர்த்தக அணுகுமுறைகள் நேர்மையற்றவை என்றார் அவர். அதுமட்டுமல்லாது, அமெரிக்காவின் தேசிய தொற்று நோய் தடுப்பு நிலையத்தின் இயக்கு நரான டாக்டர் ஆண்டனி ஃபௌசியையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
கொரோனா கிருமித்தொற்று பற்றி மீண்டும் மீண்டும் வெளிவரும் செய்திகளைக் கேட்டு அமெரிக்கர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
தமக்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்ட அமெரிக்க நாளிதழ்களைச் சாடிய அதிபர் டிரம்ப், தேர்தலில் வெற்றி பெறுவதில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பதாக காணொளி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட செய்தியாளர்களிடம் அவர் கூறினார். நேற்று முன்தினம் அரிசோனாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின்போது திரு பைடன் முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்பு காட்டியது.
இதையடுத்து, திரு பைடனை குற்றவாளி என அதிபர் டிரம்ப் வர்ணித்தார். திரு பைடனின் மகனுடைய நேர்மையற்ற வர்த்தக அணுகுமுறை பற்றி செய்தி வெளியிடாததற்கும் அமெரிக்க நாளிதழான தி நியூயார்க் போஸ்ட்டைச் சேர்ந்த செய்தியாளரை அவர் கடுமையாக விமர்சித்தார்.
இதற்கிடையே, அதிபர் டிரம்ப்புக்கும் திரு பைடனுக்கும் இடையே நாளை நடைபெற இருக்கும் இறுதி தேர்தல் விவாதத்தில் புதிய அம்சம் ஒன்று சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தேர்தல் பிரசாரத்தில் ஒருவர் மற்றொருவரைப் பேசவிடாமல் அடிக்கடி குறுக்கிட்டதால் இம்முறை அவ்வாறு நடந்தால் குறுக்கிடும் வேட்பாளரின் மைக்ரோஃபோன் முடக்கப்படும்.