பேங்காக்: தாய்லாந்தில் கடந்த சில நாட்களாக அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பிரதமர் பிராயுட் சான் ஓ சா பதவி விலக வேண்டும் என்றும் மன்னரின் அதிகாரம் குறித்து சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டங்களை அரசியல் பிரச்சினை என்று தாய்லாந்து துணைப் பிரதமர் சுபாட்டானாபோங் புன்மீசாவ் தெரிவித்துள்ளார். எனவே இப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகத்தான் தீர்வு காண வேண்டும் என்று அவர் நேற்று கூறினார்.
தாய்லாந்து சீனர்கள் வர்த்தகச் சபை, அதனுடன் தொடர்புடைய வர்த்தகச் சங்கங்கள் ஆகியவற்றுடனான வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றிய திரு சுபாட்டானாபோங் இதைத் தெரிவித்தார்.
தற்போது தாய்லாந்து எதிர்நோக்கும் பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் நாட்டைப் பொருளியல் மந்தநிலையிலிருந்து மீட்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். தாய்லாந்தைத் தற்போது உலுக்கி வரும் ஆர்ப்பாட்டங்கள் குறுகிய காலகட்டத்துக்கு மட்டுமே நீடிக்கும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார். இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளும் அதிகாரிகள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.
தாய்லாந்தின் பொருளியலை மீண்டும் உயிர்ப்பிக்க கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கு வதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அரசாங்கம் அதன் பங்கிற்கு ஒரு டிரில்லியன் பாட்டை ($43.5 பில்லியன்) வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.