ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலலாபாத் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசாக்களுக்கு விண்ணப்பிப்பதற்காக அருகில் உள்ள காற்பந்துத் திடலில் கூடியிருந்தோரிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 11 பெண்கள் உயிரிழந்தனர்.
விசாவுக்கு விண்ணப்பிக்க இன்று காலை ஆயிரக்கணக்கானோர் காற்பந்துத் திடலில் கூடியதாகக் கூறப்பட்டது.
விண்ணப்பதாரர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டபோது நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
மூன்று ஆண்கள், 10 பெண்கள் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக விசா வழங்கும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் பாகிஸ்தான் தூதரகம் விசா வழங்கத் தொடங்கியது.
தூதரகத்தில் நெரிசலைத் தவிர்ப்பதற்காக அருகில் உள்ள காற்பந்துத் திடலுக்கு விண்ணப்பதாரர்கள் திருப்பிவிடப்பட்டனர்.
திடலின் நுழைவாயிலுக்கு அருகில் நிற்க பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. திடல் திறக்கப்பட்டதும் பலரும் முண்டியடித்துக்கொண்டு உள்ளே செல்ல முற்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர் ஏஎஃப்பி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்வரிசையில் இருந்த பெரும்பாலான பெண்கள் வயதானவர்கள் என்றும் கீழே விழுந்த அவர்களால் எழ முடியாததால் மிதிபட்டு இறந்துபோனதாகக் கூறப்படுகிறது.