அமெரிக்காவில் டிரம்ப்-பைடனின் முதல் விவாதத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து உரக்கப் பேசுவதும் நையாண்டி செய்வதுமாக இருந்தது. அதோடு ஒப்பிடும்போது சிங்கப்பூர் நேரப்படி இன்று காலை இருவரும் பங்கேற்ற இரண்டாவதும் இறுதியுமான விவாதம் கூர்மையாகவும் அதே நேரம் கட்டுப்பாடுடனும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், செய்தித் தகவல்களின்படி, அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே இடம்பெறும் விவாதங்கள் பொதுமக்களிடம் பெரும்பாலும் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்துவது இல்லை என ஆய்வுகள் காண்பிப்பதாகக் கூறப்படுகிறது.
இதில் இன்று நடைபெற்ற விவாதமும் இதற்கு விதிவிலக்காக அமைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில், அமெரிக்க அரசியல், கலாசார சூழல் பெருமளவு இறுகியிருப்பதால் சுதந்திர மனப்பான்மையுடன் இருக்கும் பெருமளவிலான வாக்காளர்கள் கூட, இன்று நடந்த ஒரு விவாதத்தை வைத்து, தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளும் சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு ஒரு காரணம், பல வாரங்களாக இருவரும் தொலைக்காட்சி விளம்பரங்கள், பிரசார கூடங்கள், பேரணிகள் மூலம் மேற்கொண்டு வந்துள்ள பிரசாரத்தின் பயனாக இருவரின் நிலை, அவர்களுக்கு இடையே உள்ள கருத்து வேற்றுமைகள் போன்றவை மக்களுக்கு இந்நேரம் நன்கு தெரிந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
நேற்றைய விவாதத்தில் இரு வேட்பாளர்களுமே தத்தம் நிலையை எடுத்துக்கூற ஒருவர் மற்றொருவருக்கு வாய்ப்பளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திரு டிரம்ப் திரு பைடன் தமது கருத்துகளை கூற வழிவிட்டு முந்தைய விவாதத்தில் செய்த குறுக்கீடுகளை தவிர்த்தார். திரு பைடனைப் பொறுத்தவரை அவர் சில சந்தர்ப்பங்களில் தமது கருத்துகளை கோர்வையாக எடுத்து வைக்க தடுமாறினாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு சமாளித்தார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இரு வேட்பாளர்களுமே கொரோனா கொள்ளைநோய் போன்ற சில பிரச்சினைகளில் தங்கள் வாதங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் தொடங்கிய இடத்திற்கே திரும்பத் திரும்ப வந்ததாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இந்த விவாதம் முதல் விவாதத்துடன் ஒப்பிடும்போது ஆக்கபூர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது. “இருக்கிற கால அவகாசத்தில் நான் இரண்டு வேட்பாளர்களின் தகுதியையும் எடைபோட்டுப் பார்க்கப் போகிறேன். பொதுமக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டனர்,” என்று ஸ்டோனி புருக் பல்கலைக்கழக அரசு நிர்வாக கல்வித் துறையின் இணைப் பேராசிரியரான யான்னா குருப்னிகோவ் கூறுகிறார்.