சீனாவுடனான நெருக்கத்தைக் குறைத்துக்கொள்ளும்படி இலங்கையை அமெரிக்கா மறைமுகமாக எச்சரித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ அடுத்த வாரம் இந்தியா, இலங்கை, மாலத்தீவு, இந்தோனீசியா ஆகிய ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
சீனாவிற்கு எதிராக ஆதரவு திரட்டுவதே அவரது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சீனாவை நேரடியாகக் குறிப்பிடாமல், பொருளியல் ஒத்துழைப்பிற்காக எந்நாட்டுடன் கைகோக்கிறோம் என்பதில் கவனம் தேவை என்று அமெரிக்கா இலங்கையை எச்சரித்துள்ளது.
“பாரபட்சமான, வெளிப்படைத்தன்மையற்ற நடைமுறைகளைப் போல அன்றி வெளிப்படையான, நிலைத்தன்மைமிக்க பொருளியல் வளர்ச்சித் தெரிவுகளை நாங்கள் முன்வைக்கிறோம். அதனை மறுஆய்வு செய்யும்படி இலங்கையை நாங்கள் ஊக்குவிக்கிறோம்,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு அதிகாரி டீன் தாம்சன் தெரிவித்து உள்ளார்.
“தனது நீண்டகால வளப்பத்திற்கான பொருளியல் சுதந்திரத்தை அடைந்திட கடினமான, ஆனால் தேவையான முடிவுகளை எடுக்கும்படி இலங்கையை வலியுறுத்துகிறோம்,” என்றார் திரு தாம்சன்.
இதனிடையே, அவரது இந்தக் கருத்துகள் ‘பனிப்போர் மனநிலை’ யைக் காட்டுவதாக உள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஸாவ் லிஜியன் குறிப்பிட்டார்.
கட்டாயப்படுத்துவதன் மூலம் நாடுகளுக்கு இடையிலான இயல்பான ஒத்துழைப்பிற்கு இடையூறு விளைவிக்கும் முயற்சி வெற்றிபெறாது என்றும் அவர் கூறினார்.