கொவிட்-19 முதல் அலை கடந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்டபோது தனது ‘சாலட்’ கடையை மூட வேண்டிய கட்டாயத்துக்குட்பட்ட மா சூ, தன்னிடமிருந்த தங்க நகைகளை அடமானம் வைத்து சாப்பிட வேண்டியதாயிற்று.
யங்கூனில் இரண்டாம் அலை சூடுபிடித்தபோது, கடந்த செப்டம்பரில் மீண்டும் கடையை மூட வேண்டிய சூழல்.
நகைகள் மட்டுமின்றி உடைகள், தட்டுகள், பானைகள் என அனைத்தையும் விற்று சாப்பிட்டாகிவிட்டது.
இன்னும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை; ஆனால், வேலைக்குச் செல்லவோ, சம்பாதிக்கவோ வழியுமில்லை.
திறந்தவெளி சாக்கடைகளில் எலிகளையும் பாம்புகளையும் பிடித்து உணவாக்கவேண்டிய நிலை. மா சூவின் குடும்பம் மட்டுமல்ல, யங்கூனின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கும் குடிசைப்பகுதிவாசிகளில் பெரும்பாலானோரின் நிலை இதுதான்.
“பிள்ளைகளின் பசிப்பிணியைப் போக்க வேறு வழியில்லை,” கண்ணீர் சிந்தியவாறே குறிப்பிட்டார் மா சூ.
யங்கூனுக்கு அருகில் உள்ள ஹ்ளெயின் தார் யார் பகுதியில் வசிக்கின்றனர் 36 வயதான திருவாட்டி மா சூவும் அவரது கணவரும்.
வீடுகளுக்குப் பின்னால் உள்ள சாக்கடைப் பகுதியில் விளக்குகளை அடித்து எலியோ, பாம்போ ஏதாவது அன்றைய பசியைப் போக்க சிக்குமா என்று தினமும் தேடிப் பிடிக்கின்றனர்.
40,000க்கு மேற்பட்ட கொரோனா தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், மியன்மாரில் 1,000க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். தென்கிழக்கு ஆசிய அளவில் மோசமான பாதிப்புக்குள்ளாகியிருக்கும் யங்கூனில் லட்சக்கணக்கானோரின் நிலை திருவாட்டி மா சூவினுடையதை ஒத்திருப்பதாகக் கூறப்படுகிறது; உதவிகளும் அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை. ஆனால், அந்தக் குடிசைப் பகுதியில் வசிப்போரில் சுமார் 40 விழுக்காட்டினருக்கு உதவிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கொவிட்-19 சூழலுக்கு முன்பே மியன்மாரின் 53 மில்லியன் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையின் பிடியில் சிக்கி மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் சூழல் இருந்தது.
தற்போது அந்நாட்டு மக்களிடையே மேலும் பொருளியல் நிலவரம் இன்னும் மோசமடைந்து, வறுமையிலிருந்து மீள முடியா நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.