தென்கொரியாவில் சளிக்காய்ச்சலுக்காக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 36 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குளிர்காலத்தில் சளிக்காய்ச்சல், கொரோனா தொற்று போன்றவற்றால் ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும் பொருட்டு நேற்று (அக்டோபர் 23) பிற்பகல் 1 மணிக்கு அந்த இலவச தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறப்பட்டது.
தென்கொரியாவில் இதுவரை 25,698 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அங்கு 155 பேருக்கு தொற்று பதிவானது.
கடந்த மாதத்திலிருந்து இரு முறை கொடுக்கப்பட்ட இலவச தடுப்பூசியில் பிரச்சினைகள் ஏற்பட்டதையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் தற்போது மிகுந்த சிக்கலில் உள்ளனர்.
அடுத்த மாதம் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பு எளிதில் பாதிக்கப்படக்கூடிய முதியோர், குழந்தைகளுக்கு தடுப்பூசியை வழங்க தென்கொரியா முடிவெடுத்துள்ள நிலையில் புதிதாக 36 பேர் உயிரிழந்திருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சளிக்காய்ச்சல் தடுப்பூசிக்கும் இந்த மரணங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி இன்னும் தெரியவில்லை. மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 18 பேர் கடந்த வியாழக்கிழமையும் 8 பேர் கடந்த வெள்ளிக்கிழமையும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த இலவச தடுப்பு மருந்துகளை 10 நிறுவனங்கள் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது.