மலேசியாவில் ஆட்சியாளர்களுடன் மாமன்னர் சந்திப்பு; பிரதமரின் கோரிக்கை குறித்து ஆலோசனை

மலேசியாவில் ஆட்சியாளர்களுடன் மாமன்னர் சந்திப்பு; பிரதமரின் கோரிக்கை குறித்து ஆலோசனை

2 mins read
9c3c99d1-abc1-4cf1-9592-40b0b271fcee
படம்: இபிஏ -

மலேசிய மன்னர்கள் இஸ்தானா நெகராவில் சிறப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்து சேர்ந்தனர். நாட்டில் அவசரநிலையை நடைமுறைப்படுத்துவதன் தொடர்பில் பிரதமர் முகைதீன் யாசின் சமர்ப்பித்த கோரிக்கையின் தொடர்பில் கலந்து பேச மன்னர்களை மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷா இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சந்தித்து உரையாடுகிறார். ஜோகூர் மன்னரான சுல்தான் இஸ்கந்தர் இப்ராகிம், சிலாங்கூர் மன்னரன சுல்தான் ஷரஃபுதீன் இட்ரிஸ் ஷா, கெடா மன்னரான லாமினுல் கரிம் சுல்தான் சாலேஹுதின் அல்மர்ஹம்சுல்தான் பத்லிஷா, திரங்கானு மன்னரான சுல்தான் மிஸான் ஸைனல் அபிதின், யாங் டி பெர்துவான் பெசார் நெகிரி செம்பிலான் ஆகியோர் அரண்மனைக்கு இன்று பிற்பகல் 2.25க்குள் வந்து சேர்ந்தனர். இன்று நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அரசியல்வாதிகள் யாரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று தி ஸ்டார் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு மாமன்னர் தனது முடிவை பிரதமரிடம் தெரிவிப்பார் என்று கூறப்பட்டது. பிரதமர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு, நாட்டில் அவசரநிலையை நடைமுறைப் படுத்த திரு முகைதீன் விரும்புவதாகக் குறிப்பிட்டு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதல்ல எனவும் ஜனநாயகத்துக்குப் புறம்பானது எனவும் பலரும் கருத்துரைத்துள்ளனர். நாட்டின் வரவு செலவுத் திட்டம் குறித்த விவாதத்துக்காக அடுத்த மாதம் 6ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும்போது பிரதமர் முகைதீன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழக்கூடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், கொவிட்-19 சூழலைத் திறம்பட கையாளும் பொருட்டு அவசரநிலை நடைமுறைப்படுத்தும் கோரிக்கையை மாமன்னரிடம் பிரதமர் சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்