ஹோண்டா சிவிக் 1.8S போலிஸ் ரோந்து வாகனத்தை (MPV) செபெராங் பிராய் உத்தரா மாவட்ட போலிஸ் தலைமையகத்திலிருந்து நேற்றிரவு ஓட்டிச் சென்றதன் தொடர்பில் இரு ஆடவர்கள், ஒரு பெண் ஆகியோரை போலிசார் கைது செய்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த போலிசார் என்று கூறிக்கொண்டு MPVக்குள் நுழைந்த 28, 32 வயதுகளில் இருக்கும் சகோதரர்கள் அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவைப் பார்வையிட வந்ததாகக் குறிப்பிட்டனர்.
அந்த இருவரில் மூத்த சகோதரர், ஒரு மடிக்கணினியை காவல் நிலையத்திலேயே விட்டுவிட்டு போலிஸ் ரோந்து வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
"எல்லாம் கண நேரத்தில் முடிந்துவிட்டது. மாவட்ட போலிஸ் தலைமையகத்திலிருந்து அந்த வாகனத்தை கண்காணிப்பாளர் இல்லாமலேயே வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டனர்," என்று தகவல் தெரிந்த வட்டாரம் தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தின்போது இளைய சகோதரர் எங்கிருந்தார் என்பது பற்றிய தகவல் இல்லை.
30 நிமிடங்களாகியும் சந்தேக நபர் MPVக்கு திரும்பாததையடுத்து, கண்காணிப்பாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
வாக்கி-டாக்கி மூலமும் அந்த வாகனத்தின் இருப்பிடத்தை போலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால், சுமார் 370 கிலோமீட்டர் தூரத்துக்கப்பால் ஷா லாமில் அந்த ரோந்து வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனத்துக்குள் காரை எடுத்துச் சென்ற மூத்த சகோதரரையும் அவரது காதலி எனக் கூறப்படும் 20 வயது பெண்ணையும் போலிசார் பிடித்தனர்.
பின்னர், இளைய சகோதரரையும் போலிசார் தேடிப் பிடித்தனர். விசாரணை தொடர்கிறது.
தனது காதலியை பிரமிக்க வைப்பதற்காக மூத்த சகோதரர் இந்த போலிஸ் ரோந்து வாகனத்தைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
காதலியை டாசெக் கெலுகோரில் காரில் ஏற்றிக்கொண்டு ஒரு கடையில் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மூத்த சகோதரரை மின்கம்பி திருட்டின் தொடர்பில் போலிசார் இம்மாதம் 15ஆம் தேதி தடுத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்பும் அவர் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மூத்த சகோதரருக்கு மனநலம் சரியில்லை என்றும் கூறப்படுகிறது.
போலிசாரைப் போல போலியாக நடந்து கொண்டது, திருட்டு ஆகிய குற்றச் செயல்களின் தொடர்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

