பாரிஸ்: உலகின் பல பகுதிகளில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் அதிவேகமாகப் பதிவாகி வருகிறது. இதனால் கொவிட்-19 கிருமியை முறியடிக்கும் நடவடிக்கைகளில் பல நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. ஊரடங்கை நீட்டித்தது பிரான்ஸ். பெல்ஜியம் அதன் சொந்தக் கட்டுப்பாடுகளைக் குறிப்பிட்ட நாளுக்கு முன்னரே கொண்டு வந்தது.
இந்த அதிவேகத் தொற்றுப் பரவல் குறித்து வெள்ளிக்கிழமையன்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது. இதனால் இரண்டாவது கிருமி அலையைச் சமாளிக்கும் சுகாதார அமைப்புகளின் ஆற்றல் பாதிக்கப்படும் என்றும் இவ்வாண்டின் முன்பாதியில் கிருமியைக் கட்டுக்குள் வைத்திருந்த நாடுகளுக்கு இனி சவால்கள் காத்திருக்கின்றன என்றும் நிறுவனம் சுட்டியது.
வீழ்ந்த பொருளியலை மீட்டெடுக்கும் அதே வேளையில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து இரண்டுக்கும் சமநிலை காண அரசாங்கங்கள் திணறுகின்றன. இருப்பினும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையும் பொருளியல் நெருக்கடியும் மக்களை வாட்டி எடுத்துவிட்டது. இதனால் புதிய கட்டுப்பாடுகளால் அவர்கள் எரிச்சலடைந்துள்ளனர்.
புதிய தொற்று சம்பவங்கள் அதிகம் பதிவாகி வரும் ஐரோப்பிய நாடுளில் மீண்டும் நாடளவிலான முடக்கநிலை அறிவிப்பதைத் தவிர்த்து வருகின்றன அரசாங்கங்கள். அதற்குப் பதிலாக இரவுநேர ஊரடங்கு, சமூக ஒன்றுகூடல்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகளைக் கொண்டு வருகின்றன.
ஜெர்மனியில் 10,000வது கொரோனா கிருமி உயிரிழப்பு பதிவானதை அடுத்து, அந்நாட்டின் தலைவர் ஏஞ்சலா மெர்க்கல், "தொடர்புகளைக் குறைத்துக்கொள்வதே இலக்கு, குறைவான நபர்களைச் சந்திப்பதே சிறப்பு," என்றார்.
போலந்து அதிபர் எண்ட்ரெஸெஜ் டுடா, தாமும் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்தார். போலந்திலும் இதற்கு முன் இராத அளவில் தொற்று விகிதம் பதிவாகி வருகிறது.
ஸ்பெயினில் சென்ற வாரத் தொடக்கத்தில் ஒரு மில்லியன் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. நாடளவில் அவசரநிலை அறிவிக்கப்படுவதற்கும் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கும், மேலும் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கும், நாடே தயாராகி வருகிறது.
ஒரு மில்லியன் கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகிய மிக அண்மைய நாடாக கொலம்பியா உள்ளது. அதே மைல்கல்லைத் தாண்டிய பிரான்சில் 24 மணி நேரத்தில் 45,000க்கும் மேற்பட்ட தொற்று சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன. இரவுப் பொழுதில் ஊரடங்கை பிரெஞ்சு அரசாங்கம் சுமார் 46 மில்லியன் மக்களுக்கு விரிவுபடுத்தியது.