பேங்காக்: தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஒ-சானின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே அதிகரித்து வரும் அதிருப்தியே, ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடையக் காரணமாக உள்ளதென ஆய்வு ஒன்று கூறுகிறது.
சுவான் டுசிட் பல்கலைக்கழகம் அக்டோபர் 19 முதல் 22ஆம் தேதிவரை மேற்கொண்ட இந்த ஆய்வில் 5,738 பேர் பங்கேற்றனர்.
தாய்லாந்து அரசாங்கத்துக்கு எதிராக வெடித்துள்ள அண்மைய ஆர்ப்பாட்டங்களுக்கு திரு பிரயுத் பற்றி மக்கள் கொண்டுள்ள மனக்குமுறலே காரணம் என்று ஆய்வில் பங்கேற்ற 62 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டவர்கள் கூறியிருந்தனர். மேலும் அதிக ஜனநாயக உரிமைக்காகவும் தாய்லாந்தில் நிலவி வரும் "சர்வாதிகாரம்" ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல்கொடுப்பதாக சுமார் 50 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
முன்னாள் ராணுவத் தலைவராக இருந்த திரு பிரயுத், 2014ஆம் ஆண்டில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பில் ஆட்சியைக் கைப்பற்றினார்.
பின்னர், 2019ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமராகத் தேர்வானார். தம் ஆதரவாளர்களிடம் நேற்று முன்தினம் பேசிய திரு பிரயுத், "நான் பதவி விலகமாட்டேன்," என்று உறுதியளித்தார்.
அந்நாட்டின் தேசிய வளர்ச்சி நிர்வாகக் கழகம் நடத்திய மற்றோர் ஆய்வில், ஆர்ப்பாட்டங்கள் வன்முறைக்கும் மோதலுக்கும் வழி விடக்கூடும் என்று அஞ்சுவதாக பங்கேற்ற 1,336 பேரில் 59 விழுக்காட்டினர் கூறியிருந்தனர். இன்றும் பேங்காக் நகரில் ஆர்ப்பாட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.