ஹாங்காங்: ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அமெரிக்க தூதகரத்துக்கு அருகே காணப்பட்ட ஜனநாயக ஆதரவு இளையரை போலிசார் கைது செய்துள்ளனர்.
தூதகரத்துக்கு எதிரே உள்ள காப்பிக் கடையிலிருந்து அடையாளம் தெரியாத நபர்கள் இளையரை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 19 வயது டோனி சுங்கை போலிசார் கைது செய்துள்ளதை சவுத் சைனா மார்னிங் போஸ்ட் உறுதிப்படுத்தியது.
புதிய சட்டம் அமல்படுத்துவதற்கு முன்பு ஜனநாயக ஆதரவு குழுவுடன் சுங் சேர்ந்து செயல்பட்டார். அந்தக் குழு வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் இளையரை காணவில்லை எனத் தெரிவிக்கப் பட்டது. மேலும் இரு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.
‘ஹாங்காங்கின் நண்பர்கள்’ என்ற பெயரில் இந்தக் குழு செயல்பட்டு வந்தது.
“அமெரிக்க தூதரகத்துக்குள் இளையர் நுழைய வேண்டும் என்பதே எங்களுடைய திட்டமாக இருந்தது,” என்று பெயர் தெரிவிக்க விரும்பாத குழு உறுப்பினர் ஒருவர் கூறினார். சுங் அகதியாக விண்ணப்பிக்க முயற்சி செய்ததாகவும் குழுவினர் குறிப்பிட்டனர்.
இதற்கிடையே ஹாங்காங்கில் சிலருக்கு கொவிட்-19 சோதனையை கட்டாயமாக்கும் புதிய சட்டம் இயற்றப்படவிருக்கிறது.
இதற்கான நகல் சட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் தெரிவித்தார். கிருமித்தொற்றால் பாதிக்கக் கூடிய ஆபத்து உள்ளவர்களுக்கு புதிய சட்டம் சோதனையை கட்டாயமாக்கும் என்று அவர் கூறினார்.
மேல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.