பேங்காக்: தாய்லாந்தில் போராட்டங்கள் தீவிரமடையும் நிலையில் பிரதமர் பிரயுத் சான் ஓ சாவின் அதிகாரம் நாளுக்கு நாள் வலுவிழந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்பில் பேங்காக்கிலுள்ள சுவான் துசிட் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பங்கேற்றவர்களில் 62 விழுக்காட்டினர் நாட்டில் அண்மையகாலமாக நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு பிரதமர் பிரயுத் மீதான அதிருப்தியே காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
திரு பிரயுத் கடந்த ஆறு ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வருகிறார். இவர் முதலில் 2014ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியின் மூலம் பதவிக்கு வந்தார். பின்னர், சென்ற ஆண்டு தனது ராணுவ ஆட்சி மன்றம் வரைந்த அரசியல் சாசனப்படி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார்.
நாட்டில் போராட்டக்காரர்கள் அவர் பதவி விலக வேண்டுமென்று பல முறை கோரிக்கை விடுத்தும், பல முறை கெடு விதித்தும், இதுவரை பிரதமர் பிரயுத் பிரதமர் பதவியிலிருந்து விலக மறுத்து வருகிறார். தாய்லாந்தில் ஆர்ப்பாட்டங்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் பேசிய திரு பிரயுத், எதிர்வரும் நவம்பர் மாதம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட அரசியல் சாசனத்தை திருத்தும் பணி மீண்டும் தொடரும் என்றார்.
அப்பொழுது பேசிய அவர், மன்ற உறுப்பினர்கள் நாட்டில் என்ன நடந்தது என்பதை மறந்து பேசுவதாக குற்றம் சாட்டினார்.
“2014ஆம் ஆண்டு நான் பதவி ஏற்றிருக்காவிடில் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்,” என்று கூறிய பிரதமர், “நாட்டில் கலவர சூழல் இருந்ததை சிந்தித்துப் பாருங்கள். நான் பதவி ஏற்குமுன் நாட்டில் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டீர்களா? நாட்டில் நிலவிய குழப்பம், ஊழல் எல்லாம் மறந்துவிட்டதா? என்று மன்ற உறுப்பினர்களைப் பார்த்து அவர் ஆவேசமாகக் கேள்விக்கணை தொடுத்தாக புளூம்பெர்க் செய்தித் தகவல் ஒன்று கூறுகிறது.
திரு பிரயுத் பதவி விலகினாலும் ஆர்ப்பாட்டங்களைக் கைவிடப் போவதில்லை என போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர். அவர்கள் மன்னரைச் சுற்றியுள்ள ஆலோசகர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள அரசியல் சாசனத்துக்குப் பதிலாக புதிய சாசனம் ஒன்று வேண்டுமென கோரி வருகின்றனர். இதன்படி, அவர்கள் ஜனநாயக அடிப்படையில் உருவான வேறோர் அரசியல் சாசனம் வேண்டும் என்றும் அதில் மன்னர் மகா வஜ்ரலோங்கோர்னின் பொறுப்புகளும் வரையறுக்கப்பட வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத் தலைவர்களில் முக்கியமான ஒருவரான ஜத்துபாட் என்பவர் கூறியதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
“பிரயுத் பதவி விலகினாலும் அவரைப் போல் வேறொருவர் வருவார். பின்னர், இதே பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். எனவே, அரசாங்கத்தில் மாறுதல்கள், புதிய அரசியல் சாசனம், மன்னர் தொடர்பான மாற்றங்கள் என அனைத்தும் ஒரே சமயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று ஜத்துபாட் விளக்கினார்.