வியட்னாமில் வீசிய மொலாவி புயல்காற்றால் நாட்டின் மத்திய பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதனையடுத்து வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. 31 பேரை பலிவாங்கிய நிலச்சரிவில் மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அவர்களைத் தேடி மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக வியட்னாமில் பெய்து வரும் மழையால் குறைந்தது 160 பேர் மாண்டுவிட்டனர். கடந்த பத்தாண்டுகளில் அங்கு வீசிய புயல்களில் இதுவே மிக சக்திவாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
குவாங்நாம் மாநிலத்திலுள்ள பல பகுதிகள் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளன. அப்பகுதிகளில் மட்டும் 19 பேர் நிலச்சரிவில் சிக்கி மாண்டனர். 48 பேரைக் காணவில்லை. பலத்த புயல் காற்று வீசி ஓய்ந்த பின் ஏற்பட்டுள்ள மோசமான பருவநிலை காரணமாக தேடி மீட்கும் பணிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்களைத் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் 12 உடல்களை மீட்டனர். மேலும் 14 மீனவர்களைக் காணவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் அந்த மீனவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியதை அடுத்து அவர்களைத் தேடி மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.
இதுவரையிலும் குறைந்தது 160 பேர் மாண்டிருக்கக்கூடும் என்றும் ஏராளமானோரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இருந்தே வியட்னாம் புயலாலும் கனமழையாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
“புயலும் மழையும் எப்போது வரும் என்று எங்களால் கணித்துவிட முடியும். ஆனால் நிலச்சரிவு எப்போது எங்கு வரும் என்று எங்களால் கணிக்க முடியவில்லை,” என்று வியட்னாமிய துணைப் பிரதமர் ட்ரின் டின் டுங் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு மீட்புப் பணியினர் விரைவில் சென்றடைய முடியாதவாறு சாலைகள் மண்ணில் புதைந்தும் குப்பை கூளங்களால் மூடப்பட்டும் சில இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டும் உள்ளன. இருப்பினும் மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று துணைப் பிரதமர் டின் டுங் கூறியுள்ளார்.
வியட்னாமின் மத்திய வட்டாரத்தில் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, 56,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பதோடு மில்லியன் கணக்கானோர் மின்சாரமின்றி இருளில் செய்வதறியாது தவிக்கும் நிலை ஏற்பட்டதாக அந்த நாட்டின் விடிவி தொலைக்காட்சி தெரிவித்தது. புயல்காற்றால் கனமழையும் அவற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் சில வாரங்களாக மில்லியன் கணக்கான மக்களை துயருறச் செய்துள்ளது. மக்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வியட்னாமைத் தாக்கிய மொலாவி புயல் கடந்த வார இறுதியில் பிலிப்பீன்சையும் தாக்கியது. அதைத் தொடர்ந்து அங்கு பெய்த கனமழையாலும் நிலச்சரிவாலும் குறைந்தது 16 பேர் மாண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.