கொரோனா கொள்ளைநோயின் இரண்டாம் அலை ஐரோப்பிய நாடுகளில் பீடித்துவரும் நிலையில், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் முடக்கநிைலக்குத் திரும்பியுள்ளன. “இந்த கொள்ளைநோய் மிக வேகமாகப் பரவக்கூடும் என்ற கணிப்புகளை எல்லாம் தாண்டி இது அசுர வேகத்தில் பரவுகிறது,” என தொலைக்காட்சி உரை ஒன்றில் பிரெஞ்சு அதிபர் மெக்ரோன் எச்சரித்துள்ளார்.
“நமது அண்டை நாடுகளைப் போலவே நமது நாடும் இந்தக் கொள்ளைநோயின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இதில் நாம் அனைவரும் கொரோனா கொள்ளைநோயின் இரண்டாம் அலை பரவல், முதல் பரவலைவிட மிகக் கொடியதாக உள்ள நோய் ஒன்று நம்மை வாட்டி வதைக்கும், ஒரே நிலையில்தான் இருக்கிறோம். இதனால், இந்த கொள்ளைநோய்ப் பரவலைத் தடுத்து நிறுத்த முடக்கநிலைக்கு நாம் திரும்புவது என நான் முடிவெடுத்துள்ளேன்,” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
இன்று பிரான்ஸ் முழுவதும் நடைமுறைக்கு வரும் முடக்கநிலையில், அனைவரும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க, மருத்துவ சிகிச்சை பெற, நாள் ஒன்றுக்கு ஒரு மணிநேர உடற்பயிற்சி மேற்கொள்ளல் போன்றவற்றுக்கு மட்டுமே தங்கள் இல்லங்களை விட்டு வெளியே வரலாம். தாங்கள் வேலை பார்க்கும் முதலாளிகள் இவர்கள் அலுவலகங்களுக்குச் சென்று வேலை செய்வது அவசியம் என்று கருதினால் மட்டுமே இவர்கள் அலுவலகம் சென்று தங்கள் வேலையைப் பார்க்கலாம். எனினும், பள்ளிகள் திறந்திருக்கும்.
இதுபோல், ஜெர்மனியில் பிரதமர் ஏஞ்சிலா மெர்க்கலுக்கும் அந்நாட்டு மாநில அரசுகளுக்கும் ஏற்பட்டுள்ள இணக்கத்தின்படி, அந்நாட்டில் நவம்பர் 2ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதிவரை, மதுக்கூடங்கள், உணவகங்கள், திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டிருக்கும். இங்கும் பள்ளிகள் திறந்திருக்கும். அத்துடன், கடைகள் திறந்திருக்கும் என்றாலும் அவை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.