பிரெஞ்சு மக்களைக் கொல்ல முஸ்லிம்களுக்கு உரிமை உள்ளதெனக் குறிப்பிட்ட மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரின் பதிவுகளை டுவிட்டர் நீக்கியது

பிரெஞ்சு மக்களைக் கொல்ல முஸ்லிம்களுக்கு உரிமை உள்ளதெனக் குறிப்பிட்ட மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரின் பதிவுகளை டுவிட்டர் நீக்கியது

2 mins read
15f88823-24de-47e4-9094-2183cd4fa5ab
படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, "மில்லியன் கணக்கான பிரஞ்சு மக்களைக் கொல்ல," முஸ்லிம்களுக்கு அதிகாரம் இருக்கிறது என நேற்று (அக்டோபர் 29) தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

நேற்று பிரான்ஸ் நாட்டின் நீசின் தேவாலயம் ஒன்றில் நிகழ்ந்த தாக்குதல்களுக்குப் பிறகு திரு மகாதீர் இவ்வாறு பதிவிட்டார்.

அந்தத் தாக்குதலில் மூன்று பெண்கள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதம் தொடர்பான தாக்குதல் என்று அதனை அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர்.

தாக்குதல் நிகழ்ந்த தகவல் வெளியான பிறகு, தமது டுவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை இட்டார் திரு மகாதீர்.

"பிரஞ்சு வரலாற்றில் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பலர் முஸ்லிம்கள். பழைய படுகொலைகளுக்காக கோபப்படுவதற்கும் மில்லியன்கணக்கான பிரஞ்சு மக்களைக் கொல்வதற்கும் முஸ்லிம்களுக்கு அதிகாரம் உள்ளது," என்று தமது பதிவில் குறிப்பிட்ட திரு மகாதீர், "பெரும்பாலும் முஸ்லிம்கள் 'கண்ணுக்கு கண்' என விதியைக் கடைப்பிடிக்கவில்லி. முஸ்லிம்கள் அவாறு செய்வதில்லை. பிரஞ்சு மக்களும் அவ்வாறு செய்யக்கூடாது," என்று மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இரு தவணைகளில் மொத்தம் 24 ஆண்டுகளாக மலேசியாவின் பிரதமராக இருந்த 95 வயது மகாதீர், பிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மேக்ரான், "நாகரிகமுடையவராகக் காட்டிக்கொள்ளவில்லை," என்றும் "மிகவும் பழமையானவர்," எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அண்மையில் சாமுவெல் பாட்டி எனும் பிரெஞ்சு ஆசிரியரை பாரிசில் கொலை செய்ததன் தொடர்பில், அந்தக் கொலையை நியாயப்படுத்தவில்லை என்றும் சுதந்திர உணர்வுகளைப் பிரதிபலிப்பது, "மற்ற மக்களை அவமதிப்பதாகாது," என்று குறிப்பிட்டிருந்தார்.

தமது பதிவுகளில் டாக்டர் மகாதீர் நீசில் நிகழ்ந்த தாக்குதல் பற்றி நேரடியாக இதுவும் குறிப்பிடவில்லை.

ஆயினும் அவரது பதிவுகளுக்கு பெருமளவில் கண்டனங்கள் எழுந்தன. "மட்டுமீறிய", "அவமானத்துக்குரிய" பதிவுகள் என சமூக ஊடகவாசிகள் அந்தப் பதிவுகளைக் குறிப்பிட்டனர்.

சற்று நேரத்துக்குப் பிறகு அவரது பதிவுகள் முழுவதுமாக நீக்கப்பட்டன.

இதற்கிடையே, மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தமது டுவிட்டர் பதிவு ஒன்றில், இன்னும் கூடுதல் சேதாரம் ஏற்படுவதற்கு முன்பு திரு மகாதீரின் அனைத்து சமூக ஊடகக் கணக்குகளையும் முடக்கிவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்