அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. குடியரசுக் கட்சி சார்பில் இப்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப் மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
துணை அதிபர் வேட்பாளர்களாக குடியரசுக் கட்சி சார்பில் மைக் பென்சும் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிசும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தகுதியுள்ள வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஏற்கெனவே வாக்களித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் அதிபர் டிரம்ப்பும் ஒருவர்.
இந்நிலையில், இன்று ஒரு சில இடங்களில் வாக்களிப்பிற்கு இடையூறு விளைவிக்கும் நிகழ்வுகளும் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நிகழாமல் தடுக்கும் விதமாக லாஸ் வேகஸ், நியூயார்க், டெட்ராய்ட், சிகாகோ, ஹூஸ்டன், லாஸ் ஏஞ்சலிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலிஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இடது, வலதுசாரி குழுக்களுக்கு இடையே மோதல்கள் நிகழ்ந்த வரலாற்றைக் கொண்ட பென்சில்வேனியாவிலும் மிச்சிகன், ஃபுளோரிடா, ஜார்ஜியா, ஓரிகன் ஆகிய மாநிலங்களும் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அண்மைய மாதங்களில், மோதல் சம்பவங்களின்போது போராட்டக்காரர்கள் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
டிரம்ப், பைடன் ஆதரவாளர்கள் இடையே மோதல் வெடித்தால், ஆயுதமேந்திய கும்பல்கள் திடீர் எனத் தோன்றி தாக்குதலில் இறங்கினால், இணையத் தாக்குதல் இடம்பெற்றால் அல்லது வெடிகுண்டு வீசப்பட்டால் அவற்றை எதிர்கொள்ள ஆயத்தமாகும் விதமாக பாவனைப் பயிற்சிகளும் இடம்பெற்றன.
வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்து, இறுதி வெற்றியாளரை அறிவிப்பதில் ஒருவேளை குழப்பம் ஏற்பட்டால், அதன்பிறகு இடம்பெற வாய்ப்புள்ள சம்பவங்கள் குறித்து பல போலிஸ் அதிகாரிகளும் தீவிவாதத் தடுப்பு நிபுணர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
தீவிர வலதுசாரிக் கொள்கையைப் பின்பற்றும் சிலர், வன்முறையைத் தூண்டி, உள்நாட்டுப் போர் என்ற தங்களது இலக்கை அடைய இன்றைய தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என்று தீவிரவாதக் குழுக்கள் குறித்து ஆய்வு செய்து வரும் திருவாட்டி கேஸி மில்லர் கூறினார்.
"வாக்களிப்பில் மோசடி அல்லது முறைகேடு நடந்ததாக அதிபர் டிரம்ப்போ அல்லது வலதுசாரி ஊடகமோ செய்திகளை வெளியிடும் பட்சத்தில் வாக்காளர்கள் விரைந்து வாக்களிப்பு நிலையங்களில் திரளக்கூடும்," என்றார் திருவாட்டி மில்லர்.
நியூஜெர்சி, விஸ்கான்சின், டெக்சஸ் போன்ற பல மாநிலங்களில் தேசிய பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

