ஃபிளடெல்ஃபியா: அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பில் மீண்டும் அதன் நேர்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் அதிபர் டோனல்ட் டிரம்ப். தேர்தல் நடைபெறும் நாளையும் தாண்டி வாக்கு எண்ணிக்கை நீண்டால், அது ஒரு 'மோசமான நிலை' என்று அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு நடந்தால், தம்முடைய வழக்கறிஞர்களும் விவகாரத்தில் ஈடுபடுவர் என்று தெரிவித்தார்.
இன்று அமெரிக்க அதிபர் தேர்தல். திரு டிரம்ப்பும் அவருக்கு எதிராக ஜோ பைடனும் மோதும் நாள்.
இதுவரை கருத்துக்கணிப்புகளின்படி ஜோ பைடனே முன்னணியில் இருக்கிறார்.
இந்நிலையில் வாக்கு வேட்டையில் இறங்கிய திரு டிரம்ப், ஆதரவு திரட்டிப் பல மாநிலங்களுக்கு இறுதிக்கட்ட பிரசாரத்திற்குச் சென்ற வண்ணம் இருந்தார்.
திரு பைடனோ, முக்கிய மாநிலமாகக் கருதப்படும் பென்சில்வேனியாவுக்குச் சென்று 'வெளியே சென்று வாக்களியுங்கள்' என அங்கு கூடியவர்களிடம் வலியுறுத்தினார்.
அஞ்சல்வழியாக அமெரிக்கர்கள் பலர் முன்கூட்டியே வாக்களிக்க முந்தினர். இதன்படி சுமார் 60 மில்லியன் வாக்குகள் போடப்பட்டுவிட்டன.
ஒரு சில மாநிலங்களில் வாக்குகளை எண்ண நாட்கள், ஏன் வாரங்கள்கூட எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் வாக்களிக்கும் நேரம் முடிவடைந்து சில மணி நேரத்தில் வெற்றியாளர் யார் என்று உறுதிப்படுத்த முடியாது.
"தேர்தல் முடிந்து நீண்ட காலத்துக்கு முடிவுக்காக காத்திருப்பது நியாயமில்லை என்று நினைக்கிறேன்," என்று நார்த் கலிஃபோர்னியாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் திரு டிரம்ப்.
பென்சில்வேனியா உட்பட சில மாநிலங்கள், அஞ்சல் வழி வந்த வாக்குகளைத் தேர்தல் நாள் வரை எண்ணாமல் வைத்திருக்கும் என்றும் அது வாக்கு எண்ணிக்கையை மெதுவடையச் செய்யும் என்றும் கூறப்படுகிறது.
அஞ்சல் மூலம் கிடைக்கப் பெறும் வாக்குகள், மோசடியாக இருக்கலாம் என்று திரு டிரம்ப் பலமுறை ஆதாரமின்றி கூறி வருகிறார். ஆனால் அமெரிக்கத் தேர்தல்களில் அது மிக அரிது என்கின்றனர் தேர்தல் நிபுணர்கள்.
அமெரிக்கத் தேர்தல்களில் அஞ்சல் மூலம் வாக்குகளைச் சமர்ப்பிக்கும் முறை, நீண்டகாலமாக நடப்பில் இருக்கும் ஓர் அம்சமாகும். 2016ஆம் ஆண்டில் நான்கில் ஒருவர் இம்முறையில் வாக்கைச் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 கொள்ளை நோய் சூழலில் அஞ்சல் மூலம் வாக்களிக்கும் முறையே பாதுகாப்பானது என்று ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியும் வருகிறது. ஆனால் தேர்தல் தினத்தன்று பலர் நேரடியாக வாக்களிப்பர் என்ற நம்பிக்கையில் உள்ளனர் திரு டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர்.
தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில் தாம் முன்னணியில் இருப்பதாகத் தெரிந்தால் உடனே தாமே வெற்றியாளர் என்று பிரகடனப்படுத்திவிடுவார் என்று தமக்கு நம்பகமானவர்களிடம் திரு டிரம்ப் கூறியதாக வெளிவந்த அறிக்கையை அவர் மறுத்துள்ளார்.

