சீனாவில் ஆடவர் ஒருவர் தன் மனைவியின் உயிர் போகும்வரை தாக்கிய காணொளிகளும் படங்களும் இணையத்தில் வலம் வருகின்றன. இவை பல மில்லியன் முறை பகிரப்பட்டும் வருகின்றன. இதையடுத்து பலர் சீற்றங்கொண்டு, குடும்ப வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
ஷுஸோவ் நகரில் சனிக்கிழமை காலை நடந்த இச்சம்பவத்தில் மனைவியைப் பின்னால் ஏற்றியபடி ஆடவர் மின்-ஸ்கூட்டர் ஒன்றில் சென்றுகொண்டிருந்ததாகவும் அப்போது ஒரு வாகனத்தின் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது.
விபத்திலிருந்து தப்பிக்க ஆடவர் அவ்விடத்தை விட்டுப் போக முயன்றபோது அவரின் மனைவி அவரைத் தடுத்தார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், மனைவியை அந்த ஆடவர் தரையில் தூக்கியெறிந்து தாக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அதிகமாகப் பகிரப்படும் காணொளி ஒன்றில், ஆடவர் ஒரு முக்காலியைக் கொண்டு மனைவியைத் தாக்குவதாகத் தெரிகிறது.
காணொளியில் மிதிவண்டி ஓட்டிகள், மோட்டார் வாகனமோட்டிகள், பாதசாரிகள் என பலர் தாக்குதலை வேடிக்கை பார்ப்பதைக் காண முடிகிறது. ஆனால் யாருமே உதவிக்கு வரவில்லை. பலர் காட்சியைத் தங்கள் கைபேசியில் பதிவு செய்வதில் குறியாக இருந்தனர்.
சம்பவத்தை வேடிக்கை பார்த்தவர்களின் செயலும் சில சீன சமூகப் பிரிவுகளில் குடும்ப வன்முறை தொடர்பான அலட்சியப் போக்கும் இணையவாசிகளின் சாடலுக்குள்ளாகியுள்ளன.

