வியன்னாவில் ஐந்து பேரைப் பலிகொண்டதுடன், பலர் காயமடையக் காரணமான தாக்குதல்களுக்கு குறைந்தபட்சம் ஒரு ‘இஸ்லாமிய பயங்கரவாதி’ காரணமாக இருக்கக்கூடும் என ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் கார்ல் நெஹம்மர் இன்று (நவம்பர் 3) குறிப்பிட்டார்.
காயமடைந்தவர்களில் எழுவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக ஆஸ்திரிய பிரஸ் நிறுவனத்தின் செய்தி குறிப்பிட்டது.
சுமார் 1,000 போலிசார் தாக்குதல்காரர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக போலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
தாக்குதல்காரர்களில் ஒருவரை போலிசார் சுட்டுக் கொன்றனர். அந்த ஆடவர் தம் உடலில் போலி வெடிபொருள்களைப் பிணைத்திருந்ததாகவும் அவர் ஐஎஸ் ஆதரவாளர் என அதிகாரிகள் அடையாளம் கண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
வியன்னாவின் பழம்பெரும் தேவாலயங்களில் ஒன்றான செயின்ட் ரூப்பெர்ட் தேவாலயத்திற்கு வெளியே அந்த ஆடவரை போலிசார் சுட்டனர்.
நேற்று மாலை இஸ்லாமிய பயங்கரவாதி தாக்குதல் நடத்தியதாக திரு நெஹம்மர் தெரிவித்தார்.
துப்பாக்கிக்காரர்கள் மத்திய வியன்னா உட்பட ஆறு இடங்களில் நேற்று மாலை தாக்குதல் நடந்தினர்.
கொவிட்-19 காரணமாக முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு நேற்று பொருள்கள் வாங்க மக்கள் சாலைகளில் காணப்பட்டபோது, தானியங்கி துப்பாக்கிகளைக் கொண்டு கூட்டத்தினரை நோக்கியும் மதுக்கூடத்துக்குள் இருந்தவர்களை நோக்கியும் துப்பாக்கிக்காரன் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
ஒரு பெண் உட்பட மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். ஒரு போலிசார் உட்பட, 15க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மேலும் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவித்தன.
தாக்குதல் சம்பவங்களைக் காட்டும் காணொளிகள் எனக் குறிப்பிட்டு காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவின.
உலகத் தலைவர்கள் இந்தக் கொடுஞ்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.