ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் சில பகுதிகளில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருப்பதால் கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிப்போர் உள்நாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்குத் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பினாங்கு, மலாக்கா, ஜோகூர், கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் ஹோட்டல்கள் மீண்டும் போதிய வருமானமின்றி தவிக்கின்றன. எனவே, வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக புது யோசனைகளை ஹோட்டல்கள் ஏற்படுத்தியுள்ளன. அவற்றில் ஒன்று, ஊழியர்கள் ஹோட்டலில் இருந்து வேலை செய்யும் நடைமுறையை ஊக்குவிப்பது.
இந்த நடைமுறைக்கு ஏற்ப பினாங்கு, கிள்ளான் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வரும் பல ஹோட்டல்கள், தங்களது வளாகங்களை வேலையிடங்களாக மாற்றி வருகின்றன.
இந்த யோசனையை வாடிக்கையாளர்கள் பலரும் வரவேற்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பல மாதங்களாக வீட்டிலிருந்து வேலை செய்து சலித்துப்போன ஊழியர்கள் பலருக்கு ஹோட்டலில் தங்கி வேலை செய்வதால் புத்துணர்ச்சி கிடைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் ஊழியர்கள் ஹோட்டலில் தங்கி வேலை செய்வதில் ஏற்படும் செலவை நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே தாங்கள் அவ்வாறு செய்யத் தயார் என்பது ஊழியர்களின் கருத்து.
கொரோனா கிருமி பரவும் சூழலில் வீட்டின் ஒரு பகுதியை அலுவலகமாக மாற்றிக்கொண்டவர்கள் ஹோட்டலில் தங்கி வேலை செய்வதை விரும்பமாட்டார்கள் என்று ஹோட்டல் துறையைச் சேர்ந்தவர்கள் சிலர் கூறுகின்றனர்.

