பங்ளாதேஷில் உள்ள சமய அறக்கொடை அமைப்பு ஒன்று, ஹிஜ்ராஸ் எனப்படும் திருநங்கை சமூகத்தாருக்காக பள்ளி ஒன்றைத் திறந்துள்ளது.
அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெருவாரியான முஸ்லிம் சமூகத்தினரால் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதுடன் அவர்கள் மிக மோசமான ஏழ்மையின் பிடியில் சிக்கியுள்ளனர்.
ஹிஜ்ராஸ் இனத்தவர் தங்களது குடும்பத்தாரால் இளம் வயதிலேயே வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுவதுடன் அவர்களுக்கு முறையான கல்வி இல்லாததால், பொதுவாக அவர்கள் பிச்சை எடுப்பது, பாலியல் தொழில் போன்றவற்றுக்குத் தள்ளப்படுகின்றனர்.
“திருநங்கைகளும் மனிதர்கள்தான். அவர்களுக்கு கல்வி, மதிப்பு மிக்க வாழ்க்கை போன்றவற்றுக்கு உரிமை உள்ளது,” என்று திரு அப்துர் ரஹ்மான் அஸாத் குறிப்பிட்டார்.
பங்ளாதேஷில் உள்ள ஒரு மூன்று மாடிக் கட்டடத்தின் மேல் மாடியை சமயப் பள்ளியாக மாற்றியுள்ளார் திரு அப்துர்.
குரான் வாசிப்பு, இஸ்லாமின் அடிப்படைக் கொள்கைகள் போன்றவற்றுடன் பெங்காலி, ஆங்கிலம், கணிதம் போன்றவையும் சில வேலைப் பயிற்சிகளும் அவர்களுக்குக் கற்பிக்கப்படும்.
இதுபோல மேலும் பல பள்ளிகள் நாடு முழுவதும் திறக்கப்படும் என்றும் யாருக்கும் கல்வி மறுக்கப்படக்கூடாது என்றும் குறிப்பிட்டார் திரு அப்துர். சுமார் 100 மாணவர்கள் அந்தப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
பங்ளாதேஷில் 10,000க்கும் அதிகமான ஹிஜ்ராஸ் சமூகத்தினர் இருப்பதாக அரசாங்கம் கணக்கிடுகிறது.
ஆனால், அங்கு 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஹிஜ்ராஸ் சமூகத்தினர் இருப்பதாக மனித உரிமைகள் குழுக்கள் தெரிவிக்கின்றன. பங்ளாதேஷின் மொத்த மக்கள் தொகை 160 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்ளாதேஷில் திருநங்கைகள் மூன்றாவது பாலினமாக 2013ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டாலும் அவர்களுக்கு சமூக அளவில் உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.