கோலாலம்பூர்: கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்ள மலேசியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டதாக மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் பாராட்டியுள்ளார்.
இனம், சமயம் பாகுபாடு பாராது ஒன்றிணைந்து செயல்பட்டதற்கு மலேசியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவது அரசாங்கத்தின் கடமை என்று அவர் தெரிவித்தார்.
"ஒற்றைத் தாய்மார்கள், குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்தோர் ஆகியோருக்கு நிதியுதவி வழங்கப்பட வேண்டும்.
"நாடு வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கையில் இவர்களை மறந்துவிடக்கூடாது. தேவையான உணர்வுபூர்வ ஆதரவை இவர்களுக்கு வழங்க வேண்டும்," என்று தேசிய குடும்ப மாதத்தை நேற்று தொடங்கி வைத்தபோது திரு முகைதீன் கூறினார்.
தேசிய குடும்ப மாதத்தை மலேசியாவின் சமூக மேம்பாட்டு அமைச்சு நேற்று இணையம் மூலம் நடத்தியது.
'எங்கள் குடும்பங்களைப் பாதுகாப்போம்' என்ற கருப்பொருளை இவ்வாண்டின் தேசிய குடும்ப மாதம் கொண்டுள்ளது.
கிருமித்தொற்று நெருக்கடிநிலையால் மலேசியா பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தக் கருப்பொருள் ஏற்புடையது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
"நாட்டின் நிலைத்தன்மைக்கு குடும்பங்களின் வலிமையே முக்கிய தூணாக அமைகிறது. கொவிட்-19, அதனால் ஏற்பட்டுள்ள வாழ்வியல் மாற்றங்களை நமது வாழ்கை மாற்றிவிட்டது.
"குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சுமக்கும் பொறுப்புகள் அதிகரித்துள்ளன. சுகாதாரப் பராமரிப்பு, குழந்தை பராமரிப்பு ஆகியவற்றுக்கான தேவைகளும் கூடியிருக்கின்றன.
"வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
"அதே சமயத்தில் கொரோனா கிருமித்தொற்றால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். அப்போதுதான் அவர்களால் புதிய வாழ்க்கையைத் தொடங்க முடியும்.
"சிரமப்படும் குடும்பங்களுக்கு உதவி செய்ய அனைத்து அரசாங்க அமைப்புகள், அரசாங்க சார்பற்ற அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்," என்றார் பிரதமர் முகைதீன்.
தேசிய பொருளியல் புத்துணர்வுத் திட்டத்தின்கீழ் ஒற்றைத் தாய்மார்களுக்கான சிறப்பு உதவி, உணர்வுபூர்வ ஆதரவு பெறுவதற்கான 159999 எனும் 24 மணி நேர தொலைபேசி எண் போன்ற ஆதரவு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
"வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்கவும் பாதிக்கப்படக்கூடியவர்களும் குறைந்த வருமானம் ஈட்டுவோரும் செய்வதறியாது தவிக்கும் நிலை ஏற்படாதிருக்கவும் அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்," என்று திரு முகைதீன் தெரிவித்தார்.

